ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

1068

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும் போர்த்துகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மெட்ரிட் கழகத்திலிருந்து, 99.2 மில்லியன் பவுண்டுகளுக்கு (129.3 மில்லியன் டொலர்), ஜுவான்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளமை கால்பந்து உலகை பரபரப்பில் ஆழ்த்திய செய்தியாக மாறியிருந்தது.

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

ரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்…

ஆசியா மற்றும்  குறிப்பாக தெற்காசிய நாடுகளில் கால்பந்து போட்டிகள், கிரிக்கெட்டின்  அளவுக்கு பிரபல்யமடையவில்லை என கூறமுடியும். எனினும் கால்பந்து போட்டியை பற்றி தெரியாதவர்களுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பரீட்சையம் என்றால் அது மிகையாகது.

இம்முறை உலகக் கிண்ண தொடரில் போர்த்துக்கல் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமை தாங்கிய நிலையில், போர்த்துக்கல் அணி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி, உருகுவே அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. எவ்வாறாயினும் ரொனால்டோ போர்த்துக்கல் அணியின் வீரர் என்பதையும் விட, அவர் ரியல் மெட்ரிட் கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் எனவே பலராலும் அறியப்பட்டிருந்தார்.

இப்படியிருக்கையில், இறுதிவரை ரொனால்டோவையும் ரியல் மெட்ரிட் கழகத்தையும் பிரிக்க முடியாது என பலரும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். ஆனால், இத்தனை கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ரொனால்டோ, கடந்த 16ஆம் திகதி ஜுவான்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கிண்ண நிறைவுடன் இத்தாலியைச் சேர்ந்த ஜுவான்டஸ் அணியுடன் இணைந்தமையானது ரசிகர்களால் எதிர்பாராததும், திடீரென ஏற்றுக்கொள்ள முடியாத செய்தியாகவும் பார்க்கப்பட்ட போதும், இத்தாலி மற்றும் ஜுவான்டஸ் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய சாதனை போன்று கொண்டாடப்பட்டது. தற்போது ரொனால்டோ ஜுவான்டஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தமையை, பேச்சில் மாத்திரம் சாதனையாக கொண்டாடாத ரசிகர்கள் டொலர்களிலும் காட்டியுள்ளனர்.

அதாவது, உலகின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை அணிக்கு ஒப்பந்தம் செய்த ஜுவான்டஸ் அணி, அவரின் உத்தியோகபூர்வ எண் 7 கொண்ட ஜுவான்டஸ் ஜேர்சியை விற்பனைக்கு  விட்டது. இந்த நிலையில், 24 மணித்தியாலங்களில் 5 இலட்சத்து 20 ஆயிரம் ஜேர்சிகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட, ஜுவான்டஸ் கழகம் மிகப்பெரிய இலாபத்தை அள்ளியுள்ளது. விற்பனை செய்யப்பட்ட ஜேர்சிகள் மூலம் இப்போதுவரை 62.4 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளது. இந்த ஜேர்சியின் மூலமாக பெறப்பட்ட தொகையானது, ரொனால்டோவின் ஒப்பந்தத் தொகையில் பாதியாகவும் மாறியுள்ளது.

கிரிஸ்டியானோ ரொனால்டோவின் ஜுவான்டஸ் ஜேர்சியுடன் ரசிகர்கள்

அதுமாத்திரமின்றி, ரொனால்டோ ஜுவான்டஸ் அணிக்காக இதுவரையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத போதும், அவரது வருகையின் மூலம் அந்த கழகத்தின் பங்குச் சந்தை விலை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இத்தோடு நின்றுவிடாமல், சமூக வலைத்தளங்களில் ஒரு நாளில் மாத்திரம் சுமார் 1.5 மில்லியன் பின்பற்றுனர்களை (followers) ஜுவான்டஸ் அணி பெற்றுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் சுமார் 1.1 மில்லியன் பின்பற்றுனர்களை கடந்துள்ள ஜுவான்டஸ், பேஸ்புக் ரசிகர்கள் பக்கத்தில் 50 ஆயிரம் ரசிகர்களை கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 33 மில்லியன் பேருக்கு ஜுவான்டஸ் பேஸ்புக் பக்கம் காட்டப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தினால் உலகையே ஈர்த்த நாயகர்கள்

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன்…

இவ்வாறு ரொனால்டோ, ஜுவான்டஸ் அணியுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் அதேவேளை சில சங்கடமான செய்திகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றார். ரியல் மெட்ரிட் அணியின் ரசிகர்கள், ரொனால்டோ விலகியதால் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதுடன், கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் முக்கியமாக நேபாள ரசிகர்கள் சிலர், ரொனால்டோவின் ஜுவான்டஸ் ஜேர்சியுடன் கூடிய புகைப்படங்கள் அடங்கிய கழிவறை காகிதங்களை (Toilet Paper) விற்பனைக்கு விட்டுள்ளனர். ரொனால்டோவை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த காகிதங்கள் தொடர்பான செய்திகளும் தற்போது பரவாலாக பேசப்பட்டு வருகின்றது.

நேபாளத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட கழிவறை காகிதங்கள்

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<