நுரையீரல் இரத்த கசிவால் கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்த ஆஸி. வீரர்

372

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பிராந்திய மற்றும் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளான டர்ஹம் மற்றும் வோர்சஸ்டெர்ஷேயார் ஆகிய அணிகளுக்காக டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்த அவர், பந்துவீசும் போது நுரையீரல் இரத்த கசிவு காரணமாக சில சமயங்களில் மைதானத்தில் வைத்து இரத்த வாந்தி எடுத்தார். அதன்பிறகு வைத்தியர்களை அணுகிய அவருக்கு, தொடர்ந்து பந்துவீசினால் இதன் பாதிப்பு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து. அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் நேற்று (13) அறிவித்தார்.

மில்லர், டு பிளேசிஸ் ஆகியோரின் சதங்களோடு ஒரு நாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்த்திரேலிய அணிகள்….

“எனது நுரையீரலில் ஏற்பட்டுள்ள மர்மமான இரத்த கசிவை குணப்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் சொன்னார்கள். நான் கிரிக்கெட் விளையாடிய காலப்பகுதியில் நுரையீரலில் எந்தவிதமான சேதமும் ஏற்படாததாலும், அபாயகரமான இரத்தப்போக்கு ஏற்படாத காரணத்தாலும், அந்த நோய் தொடர்பில் அறிந்து இருக்கவில்லை” என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவின் வானொலியொன்றுக்கு ஹேஸ்டிங்ஸ் வழங்கிய செவ்வியில், “உண்மையில் ஒவ்வொரு முறையும் நான் களைத்துப் போய் மீண்டும் பந்துவீசுவதற்கு தயாராவதற்கு முயற்சி செய்கிறேன், அந்த சந்தர்ப்பங்களில் நான் இரத்தத்தை இருமினேன்” என தெரிவித்திருந்தார்.

எனது வாழ்க்கையில் கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களாக நான் கஷ்டங்களுக்கும், மனவேதனைக்கும் ஆளாகியிருந்தேன். ஆனால், நான் தற்போது அந்த நிலைமைகளை எல்லாம் நன்கு புரிந்துகொண்டு விட்டேன். உண்மையில் பிக் பேஷ் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்வது என்ற ஆசை எனக்கு இருந்தது. எங்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் இருந்தது என தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் டி-20 தொடரில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக கடந்த 7 வருடங்களாக விளையாடி வந்த ஹேஸ்டிங்ஸ், கடந்த வருடம் போட்டித் தொடரில் அவ்வணியின் தலைவராகவும் செயற்பட்டார். இதுஇவ்வாறிருக்க, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2018-2019 பருவகாலத்துக்கான பிக் பேஷ் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அரசியலில் கால்பதிக்கும் பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி …..

இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இடைநடுவில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய அவர், நியூசிலாந்திற்கு எதிராக எட்ஜ்பெஸ்டனில் தனது இறுதி சர்வதேச போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, .பி.எல் போட்டிகளில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான டர்ஹம் அணிக்காக 2014 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் விளையாடிய அவர், 2017ஆம் ஆண்டு வோர்சஸ்டெர்ஷேயார் அணிக்காகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிட்னியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோன் ஹேஸ்டிங்ஸ், 2012 ஆம் ஆண்டு பேர்த் நகரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த அவர், 2017ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.