மேற்கிந்திய தீவுகள் தொடர் நடைபெற வேண்டும் என்கிறார் ஜோ ரூட்

58

சுற்றுலா மேற்கிந்திய தீவுகளுடனான தொடரை எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கான  வழிகளை கண்டறிய வேண்டும் என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர் ஆரம்பமாகும் பட்சத்தில், வீரர்களின் தனிமைப்படுத்தல், பரிசோதனை செயற்பாடுகள் மற்றும் சமுக இடைவெளி போன்றவை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடைக்கு உள்ளாகியுள்ள உமர் அக்மல் மீது புதிய குற்றச்சாட்டு

சூதாட்டத் தரகர்கள் என சந்தேகிக்கப்படும் ……….

மேற்குறிப்பிட்ட இந்த விடயங்கள் வீரர்களுக்கு மாத்திரமின்றி, அதிகாரிகள் மற்றும் போட்டிக்கான ஊடகவியலாளர்களுக்கும் உள்ளடங்கும். எனவே, இந்த நடைமுறையானது போட்டித் தொடரை நடத்துவதற்கு ஏற்றதாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

“மேற்குறிப்பிட்ட விடயங்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த தொடர் நடைபெறாவிட்டால் அது ஏமாற்றத்துக்குறியதாகும். ரசிகர்கள் நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளை பார்வையிட ஆவலாக உள்ளனர். இவ்வாறான தருணத்தில் தொடர் நடைபெறாவிட்டால், அவர்கள் மேலும் ஏமாற்றமடைவர். 

வீரர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவர். இதில், ஊடகவியலாளர்களுக்கும், தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் எந்தவொரு இடையூறும் இல்லை. ஆடுகளத்தில் தவிர ஏனைய இடங்களில் எதிரணியுடன் தொடர்புக்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படாது. இரண்டு அணிகளின் மதிய போசனத்துக்கும் தனித்தனியான அறை வழங்கப்பட வேண்டும். இதுவொரு வித்தியாசமான உணர்வாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். 

விடுக்கப்பட்டுள்ள ஆலோனைகளின் படி, உயிரியல் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்டு, இரசிகர்கள் இல்லாத மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதில், சௌதெம்டன், மென்செஸ்டர் மற்றும் ஹெடிங்லேவ் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடக்கும்படி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என ஜோ ரூட் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, இதற்கு பதிலளிக்கும் முகமாக கருத்து வெளியிட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் தலைவர் ஜேசன் ஹோல்டர், தொடருக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்னர் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நிலைமையானது மிக மிக தீவிரமான ஒன்று. உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என நாம் அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். எனவே, எமது சாதாரண வாழ்க்கையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு முன்னர், பாதுகாப்பை உறுதிசெய்துக்கொள்வது மிக முக்கியமான விடயம்” என்றார்.

இந்த விடயம் குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிடுகையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபை வழங்கியுள்ள ஆலோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<