சுதந்திர கிண்ண இரண்டாம் நாள் போட்டிகள் அனைத்தும் சமநிலையானது

327

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்து லீக் சுற்றுத் தொடரின் இரண்டாம் நாளுக்குறிய போட்டிகள் இரண்டும் சமநிலையில் முடிவுற்றுள்ளன.

செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த சுற்றுத் தொடரின் இரண்டாம் நாளுக்குரிய போட்டிகள் புதன்கிழமை (26) குருனாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

வடக்கு எதிர் சபரகமுவ

புதன்கிழமை முதல் ஆட்டமாக மாலை நேரம் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், வட மாகாண அணி இலங்கையில் உள்ள முன்னணி லீக்குகளில் ஆடும் வீரர்களை அதிகமாக உள்ளடக்கி பலம் கூடிய அணியாக களமிறங்கியது.

எனினும், போட்டியின் இறுதி நிமிடம்வரை ஈடு கொடுத்து விளையாடிய சபரகமுவ வீரர்களால் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனாலும், வட மாகாண வீரர்களுக்கும் எந்தவொரு கோலையும் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே, ஆட்டம் கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் முடிவுற்றது.

முழு நேரம்: வடக்கு 0 – 0 சபரகமுவ

தென் எதிர் மேல்  

புதன்கிழமை இரண்டாவது போட்டியாக இரவு நேரம் இடம்பெற்ற இந்த ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் இளம் வீரர் ஷெஷான் பிரபுத்த வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால் மொஹமட் ஹஸ்மீர் மேல் மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர், போட்டி முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், தென் மாகாண அணிக்கு மாற்று வீரராக வந்த சசித், தான் மைதானத்திற்குள் நுழைந்த அடுத்த நிமிடத்திலேயே அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, ஆட்டம் நிறைவில் இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோலினால் தென் மாகாண அணி 1-1 என போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

முழு நேரம்: தென் 1 – 1 மேல்  

கோல் பெற்றவர்கள்

தென் – PRSH சசித் 89’

மேல் – மொஹமட் ஹஸ்மீர் 16‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<