மக்கள் நாயகனாக மாறியுள்ள இந்தியாவின் உலகக் கிண்ண நாயகன்

73
Twitter/ICC

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ண நாயகனாக சேவை புரிந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோகிந்தர் சர்மா, தற்போது மக்களின் நாயகனாகவும் மாறியிருக்கின்றார். 

யுத்தம் முதல் கொரோனா வைரஸ் வரை கிரிக்கெட் உலகை உலுக்கிய சம்பவங்கள்

கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ்…..

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக மாறிய இந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று காணப்பட்டிருந்தது. 

இந்நிலையில், போட்டியின் இறுதி ஓவரினை வீசிய ஜோகிந்தர் சர்மா பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பினை இல்லாமல் செய்ததோடு இந்திய கிரிக்கெட் அணி கன்னி T20 உலகக் கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்திருந்தார். 

இந்திய அணிக்காக ஜோகிந்தர் சர்மா அன்று மைதானத்தில் காட்டிய போராட்டம் இன்று பொது வெளியிலும் தொடர்கின்றது. தற்போது, ஹரியானா மாநிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக (DSP) கடமை புரியும் ஜோகிந்தர் சர்மா, கொரோனா வைரஸிற்கு எதிராக போராட, ஒரு காவல்துறை அதிகாரியாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக, உலகமே முடங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் 21 நாட்களுக்கு முழு நாட்டினையும் முடக்குவதற்கு நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறி நடப்போர் இரண்டு வருட சிறைத் தன்டணையை எதிர் நோக்குவார்கள் எனக் கூறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஜோகிந்தர் சர்மாவின் களப்பணியும் இடம்பெறுகின்றது.   

ஜோகிந்தர் சர்மாவின் இந்த களப்பணியுடன் இணைந்த போராட்டத்தினை இந்திய  கிரிக்கெட் இரசிகர்கள் மாத்திரமல்லாது, சர்வதேச கிரிக்கெட் வாரியமும் பாராட்டியிருக்கின்றது. 

இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரையில், 8 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜோகிந்தர் சர்மா 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரும், ஏப்ரல் 15ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<