தேசிய விளையாட்டு விழா வேகநடை, சைக்கிளோட்டம், மரதன் போட்டிகள் ஒக்டோபரில்

221

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான வேகநடை, சைக்கிளோட்டம் மற்றும் மரதன் ஆகிய போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கதரகமவில் நடைபெறும் என விளையாட்டுத்துறை  அமைச்சு நேற்று (02) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. 

இதன்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேகநடைப் போட்டிகள் எதிர்வரும்க்டோபர் மாதம் 10ஆம் திகதி காலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேசிய விளையாட்டு விழா நடைபெறும் திகதி அறிவிப்பு

இதேநேரம், ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டிகள் அதே தினத்தன்று காலை 8.00 மணிக்கும், பெண்களுக்கான சைக்கிளோட்டம் 8.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இரு பாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டிகள் எதிர்வரும்க்டோபர் மாதம் 11ஆம் திகதி காலை 5.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தப் போட்டிகள் அனைத்தும் கதரகமவை அண்மித்த பகுதியில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை போட்டிகள் அனைத்தும் திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க விரும்புகின்ற வீரர்கள், தத்தமது மாகாண விளையாட்டு திணைக்களத்தினூடாக விண்ணப்பப்படிவங்களைப் பெற்று இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக இவ்வனைத்துப் போட்டிகளும் பரீட்சார்த்தமாக கடந்த வருடம் திறந்த மட்டப் போட்டிகளாக நடத்தப்பட்டன

தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம்

எனினும், வீரர்களினால் முகங்கொடுக்க நேரிட்ட ஒருசில முரண்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த மூன்று போட்டிகளும் இவ்வருடம் முதல் ஒவ்வொரு மாகாணங்களினாலும் முன்மொழியப்படுகின்ற வீரர்களை மாத்திரம் பங்குபற்றச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும், கொவிட் – 19 வைரஸ் காரணமாக கடந்த வருடத்தைப் போல இம்முறையும் திறந்த மட்டப் போட்டிகளாக நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வேகநடை, சைக்கிளோட்டம் மற்றும் மரதன் ஆகிய போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பெற்றுக் கொள்கின்ற வீரர்களுக்கு 8 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரை பணப்பரிசு வழங்கப்படவுள்ளன

இதில், தங்கப் பதக்கம் வெல்கின்ற வீரருக்கு 50 ஆயிரம் ரூபாவும், வெள்ளிப் பதக்கம் வெல்கின்ற வீரருக்கு 40 ஆயிரம் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வெல்கின்ற வீரருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.   

தேசிய விளையாட்டு விழாவை ஆகஸ்ட் முதல் நடத்த தீர்மானம்

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் எஞ்சியுள்ள 29 போட்டி நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்துவது தொடர்பில் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எதுஎவ்வாறாயினும், தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க