பெப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கு மூவர் பரிந்துரை

277

சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிமுகம் செய்துள்ள மாதத்தின் சிறந்த வீரர் விருதில் பெப்ரவரி மாதத்திற்கு இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கைல் மேயர்ஸ் ஆகிய மூவரது பெயர்களை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் ஐசிசி ஒவ்வொரு மாதத்திற்கான சர்வதேச அளவில் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.   

இதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான விருதை இந்திய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பண்ட் தட்டிச் சென்றார்.   

ஜனவரி மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரரானார் ரிஷாப் பண்ட்

இந்நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஷ்வின், சதம் உட்பட 176 ஓட்டங்களைக் குவித்து 24 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்

அஹமதாபாத்தில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டில், 7 விக்கெட்டுக்களை சாய்த்த இவர், டெஸ்ட் அரங்கில் தனது 400ஆவது விக்கெட் மைல்கல்லையும் பதிவு செய்தார்.  

இதன்படி, ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஷ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்

இதேபோல, இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டைச் சதம் உட்பட 333 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், பந்துவீச்சில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிட்டகொங்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மேற்கிந்திய தீவுகளின் கைல் மேயர்ஸ், இரட்டைச் சதம் விளாசி 210 ஓட்டகள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதேவேளை, வீராங்கனைகளுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் டெம்மி பியூமண்ட், நாட் ஸ்சிவெர், நியூசிலாந்தின் புரூக் ஹாலிடே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

எனவே, ஐசிசி இன் மாதாந்த சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் மற்றும் ரசிகர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கின்றனர்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…