கத்தாரில் மரதன் ஓட்டத்தை இடைநடுவில் நிறுத்திய ஹிருனி

116

உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை ஹிருனி விஜேரத்ன, அதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக இடைநடுவில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். 

இதன்படி, 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இப்போட்டியில் 21 கிலோ மீற்றர் தூரத்தை மாத்திரம் ஓடிய ஹிருனி, ஒரு மணித்தியாலம், 26 நிமிடங்கள் 22 செக்கன்களுடன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்

தேசிய மெய்வல்லுனரில் அமெரிக்கா வாழ் வீராங்கனை ஹிருனிக்கு தங்கம்

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி ……..

17ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வெள்ளக்கிழமை (27) கத்தார் தலைநகர் தோஹாவில் ஆரம்பமாகியது. இதில் போட்டிகளின் முதல் நாளன்று நள்ளிரவு (கத்தார் நேரப்படி 11.30 மணி) நடைபெற்ற பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் இலங்கை சார்பாக ஹிருனி விஜேரத்ன பங்குகொண்டார்

சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிகள் வரலாற்றில் முதல்தடவையாக நள்ளிரவில் நடைபெற்ற இப்போட்டியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பங்குகொண்ட ஹிருனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது

அதிக வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக அவரால் போட்டியின் அரைவாசி தூரத்தை மாத்திரமே கடக்க முடிந்தது. இதனால் அவர் போட்டியை நிறைவுசெய்யாமலே விலகிக் கொண்டார்

ஹிருனி, ஜேர்மனியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டஸ்ல்டோர்வ் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி (2 மணி. 34நிமி. 10 செக்.) இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்காகவும் தகுதி பெற்றார்

அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டத்தில் 34 சாதனைகள் முறியடிப்பு

கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை ….

இதன்படி, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2ஆவது தடவையாகவும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அவர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பங்குகொண்ட ஒரேயொரு விராங்கனையாகவும் இடம்பிடித்தார்

இந்த நிலையில், போட்டியின் பிறகு ஹிருனி வழங்கி செவ்வியில், ”மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்போட்டியில் பங்குகொள்ள வந்தேன். ஆனால், அதிக உஷ்ணம் காரணமாக என்னால் ஓட முடியாமல் போனது. எனது கால்கள் இயங்க மறுத்துவிட்டன. இதனால் நான் போட்டியிலிருந்து விலகினேன். உண்மையில் கவலையாக உள்ளது

பொதுவாக 36 பாகை செல்ஷியஸ் உஷ்ணத்துக்கு மத்தியில் மரதன் ஓட்டப் போட்டிகளை நடத்துவது என்னைப் பொறுத்தமட்டில் செய்யக்கூடாத விடயமாகும். ஏனெனில் நான் முதலுதவியைப் பெற்றுக்கொள்ள சென்ற போது எனது உடலின் உஷ்ணம் 40 பாகை செல்ஷியசாக இருந்தது” என அவர் தெரிவித்தார்

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறற் 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த ஹிருனி விஜேரத்ன, குறித்த இரண்டு போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்று இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் ஒட்டுமொத்தத்தில் ஓடிய 68 வீராங்கனைகளில் 40 பேர் மாத்திரமே போட்டியை நிறைவு செய்திருந்ததுடன், ஏனைய 28 வீராங்கனைகளும் கடும் உஷ்ணம் காரணமாக இடைநடுவில் விலகிக் கொண்டனர்

அதுமாத்திரமின்றி, 20இற்கும் மேற்பட்ட வீராங்கனைகளை வைத்தியாசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

இதுஇவ்வாறிருக்க, இப்போட்டியில் கென்யா நாட்டு வீராங்கனை ரூத் செப்கெட்டிச் (2 மணி. 32.நிமி. 43 செக்.) தங்கப் பதக்கத்தையும், பஹ்ரெய்னின் ரோஸ் செலிமோ (2 மணி. 33நிமி. 45 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், நமிபியாவின் ஹெலாலியா ஜொஹானெஸ் (2 மணி. 34நிமி. 15 செக்.) வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<