சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு

ICC T20 World Cup – 2021

156
Getty Image

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 7ஆவது T20 உலகக் கிண்ணத் தொடரானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றில் குழு 1இல் நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றுள்ளதுடன், அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வெற்றியீட்டி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

மேற்கிந்திய தீவுகளை T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றிய இலங்கை

இதனிடையே, நாளை (06) நடைபெறவுள்ள தமது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் முன்னணி அனுபவ சகலதுறை விரரான டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

இலங்கை அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டிக்குப் பிறகு இடம்பெற்ற நேர்காணலில் வைத்து தனது ஓய்வை பிராவோ உறுதிப்படுத்தினார். இதுகுறித்து டுவைன் பிராவோ கருத்து தெரிவிக்கையில்,

”நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் நாட்டுக்காக விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது நாங்கள் எதிர்பார்த்த உலகக் கிண்ணம் அல்ல, வீரர்களாகிய நாங்கள் விரும்பிய உலகக் கிண்ணம் அல்ல. இது கடினமான போட்டி. அவுஸ்திரேலியாவுடன் நாளை நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.

இலங்கை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணியில் இடம்பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி உலக அளவில் நடைபெற்று வரும் பல T20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய வீரராக பங்கேற்று வருகிறார்.

அத்துடன், இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து T20 லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<