குசல் மெண்டிஸின் சதம் வீண்; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது யாழ்ப்பாணம்

National Super League Four Day Tournament 2022

181

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகளின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (04) நிறைவுக்கு வந்தன.

இதில் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த யாழ்ப்பாண அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தனன்ஞய டி சில்வா தலைமையிலான யாழ்ப்பாண அணி தகுதிபெற்றது.

இதனிடையே, ஓஷத பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸின் சதங்கள், லஹிரு உதார மற்றும் கமில் மிஷாரவின் அரைச்சதங்கள் மற்றும் அசித்த பெர்னாண்டோவின் 4 விக்கெட்டுகள் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த கண்டி அணி, காலி அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

எனவே, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

கொழும்பு எதிர் யாழ்ப்பாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, குசல் மெண்டிஸின் சதத்தின் உதவியுடன் தமது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்கiஇளப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, சமிந்த பெர்னாண்டோவின் சதம் மற்றும் நிபுன் மாலிங்கவின் அரைச்சதத்தின் உதவியுடன் 339 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து, 67 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 158 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்படி, 92 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாண அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதானவின் அரைச்சதத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் 3 போட்டிகளில் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த கொழும்பு அணி அரை இறுதியுடன் வெளியேறியது.

மறுபுறத்தில் திலின கண்டம்பியின் பயிற்றுவிப்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற தேசிய சுபர் லீக் தொடரின் 3ஆவது இறுதிப்போட்டிக்கு யாழ்ப்பாண அணி தகுதிபெற்றது.

முன்னதாக தேசிய சுபர் லீக் தொடரின் ஓர் அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு நடைபெற்ற தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரிலும் யாழ்ப்பாண அணி சம்பியனாக மகுடம் சூடியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 272 (110.5) – குசல் மெண்டிஸ் 114*, மாதவ வர்ணபுர 42, கிரிஷான் சன்ஜுல 39, திமுத் கருணாரத்ன 39, தனன்ஞய டி சில்வா 5/48, ஜெப்ரி வெண்டர்சே 2.59

யாழ்ப்பாண அணி – 339 (93.3) – சமிந்த பெர்னாண்டோ 123, நிபுன் மாலிங்க 80, நவோத் பரணவிதான 42, சதீர சமரவிக்ரம 32, நிஷான் மதுஷ்க 24, கவிக டில்ஷான் 6/124, நளின் பிரியதர்ஷன 2/68

கொழும்பு அணி – 158 (59.3) – பிரமோத் மதுவந்த 54*, குசல் மெண்டிஸ் 39, சிதார கிம்ஹான் 18, திலும் சுதீர 3/35, ஜெப்ரி வெண்டர்சே 2/22, தனன்ஞய டி சில்வா 2/55

யாழ்ப்பாண அணி – 95/1 (23) – நவோத் பரணவிதான 59*, நிஷான் மதுஷ்க 32

முடிவு – யாழ்ப்பாண அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

கண்டி எதிர் காலி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 458 ஓட்டங்களை எடுத்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் சதங்களைக் குவிக்க, லஹிரு உதார அரைச்சதத்தைப் பெற்று வலுச்சேர்த்தார்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய காலி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்களைக் குவித்தது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் பபசர வடுகே (78), ஹஷான் துமிந்து (74), தனன்ஞய லக்ஷான் (60) அரைச்சதங்களைக் குவித்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அஷைன் டேனியல் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதனையடுத்து 104 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்ட நேரம் முடிவுக்குவர போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் கமில் மிஷார 63 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கண்டி அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

எனவே, யாழ்ப்பாணம் – கண்டி அணிகள் மோதும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 458 (125.2) – ஓஷத பெர்னாண்டோ 127, கமிந்து மெண்டிஸ் 108, லஹிரு உதார 87, கசுன் விதுர 45, சுமிந்த லக்ஷான் 3/65, தனன்ஞய லக்ஷான் 2/57, டில்ஷான் மதுஷங்க 2/83, அகில தனன்ஞய 2/85

காலி அணி – 354 (92.1) – பபசர வடுகே 78, ஹஷான் துமிந்து 74, தனன்ஞய லக்ஷான் 60, சங்கீத் குரே 44, கவிஷ்க அன்ஜுல 31, அசித்த பெர்னாண்டோ 4/69, அஷைன் டேனியல் 3/86

கண்டி அணி – 155/4 (34.1) – கமில் மிஷார 63, கமிந்து மெண்டிஸ் 42, லஹிரு உதார 32*, அகில தனன்ஞய 2/67

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<