இலங்கை வலைப்பந்திற்கு டயலொக் தொடர்ந்தும் அனுசரணை

100

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கு 2024ஆம் ஆண்டு வரை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

பாடசாலை, கழகம் மற்றும் தேசிய மட்டங்களில் அதிகளவான வீராங்களைகளின் பங்களிப்புடன் பரவலாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாக வலைப்பந்து விளையாட்டு விளங்குகிறது.

அதற்கமைய, இலங்கை தேசிய வலைப்பந்து அணியானது ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தொடர்ந்து சிறப்பாக பிரகாசித்து வருவதுடன் தற்போது நடப்புச் சம்பியனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய வலைப்பந்து சம்மேளனத்திற்கு (NFSL) 2018ஆம் ஆண்டு முதல் தடவையாக டயலொக் தனது அனுசரணையை வழங்கியது. மேலும், பல ஆண்டுகளாக தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதன் மூலம் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும், திறமையான வீரர்களை உருவாக்குவதற்கும் டயலொக் தமது ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

>> தேசிய பாராலிம்பிக் சங்கத்துக்கு டயலொக் தொடர்ந்து அனுசரணை 

இந்தநிலையில், இலங்கை வலைப்பந்து சம்மேளத்துக்கு டயலொக் மீண்டும் அனுசரணை வழங்க முன்வந்தமை தொடர்பில் அந்த சம்மேளனத்தின் தலைவர் லக்ஷ்மி விக்டோரியா கருத்து தெரிவிக்கையில்,

”கடந்த சில ஆண்டுகளாக கொவிட் 19 தொற்றின் காரணமாக எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் தேசிய சிரேஷ்ட வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரை வெற்றிகரமாக நாங்கள் நடத்தினோம். இது எமது அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்க முடியாது. எனவே, இவ்வாறு இலங்கையில் வலைப்பந்து விளையாட்டுக்கு ஆதரவளிப்பதில் டயலொக் ஆசிஆட்டா தமது அனுசரணையை நீடித்தமைக்காக டயலொக்கிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.

‘இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதிலும் எதிர்கால சம்பியன்களை வளர்ப்பதிலும் இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கான அனுசரணையை தொடர்ந்தும் வழங்க முடிந்துள்ளதையிட்டு டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது மகிழ்ச்சி அடைகின்றது. இலங்கை வலைப்பந்தாட்ட அணியானது ஆசிய மட்டத்திலான சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற அதேவேளை, ஏனைய சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணி இதே உத்வேகத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் என நான் நம்புகின்றேன்’ என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் அஷானி சேனாரத்ன தெரிவித்தார்.

>> ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம்!

இலங்கை கிரிக்கெட், கரப்பந்து, மற்றும் ஈ ஸ்போர்ட்ஸ் அணிகளுக்கு  டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், பாடசாலை றக்பி மற்றும் பாராலிம்பிக் உட்பட இராணுவ பாரா விளையாட்டுகள், தேசிய பாரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் அஷானி சேனாரத்ன, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மியிடம் அனுசரணைக்கான காசோலையை அண்மையில் கையளித்தார். இதன்போது இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் செயலாளர் விந்தனா தயாரத்ன மற்றும் பொருளாளர் பத்மினி ஹொரணகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<