இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணம் 2022

ACC Asia Cup 2022

3154

ஆசிய கிண்ணம் 2022 தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் T20I போட்டிகளாக நடத்தப்படும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆசிய கிண்ணத்தொடருக்கான போட்டிகள் ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் 11ம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராவல்பிண்டியிலிருந்து லாஹூரிற்கு போட்டிகளை மாற்றிய பாகிஸ்தான்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும், கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தொடர் கைவிடப்பட்டது. தொடர்ந்து, 2021ம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த சந்திப்பு இலங்கையில் இன்று (19) நடைபெற்றுமுடிந்த நிலையில், ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆசியக் கிண்ணத்தின் இந்த ஆண்டை பொருத்தவரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், இந்த அணிகளுடன் தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணியும் இடம்பெறும். அதன்படி, மேற்கு பிராந்தியத்துக்கான தகுதிகாண் போட்டியில் குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், கிழக்கு பிராந்தியத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் சிங்கபூர் மற்றும் ஹொங் கொங் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதுவைரை நடைபெற்றுள்ள ஆசிய கிண்ண போட்டித்தொடரை பொருத்தவரை 14 பருவங்களில் இந்திய அணி 7 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளதுடன், இலங்கை அணி 5 தடவைகள் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<