இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

77

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிராக இன்று (27) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை கட்புலனற்றோர் அணி இமாலய ஓட்டங்களை பெற்றபோதும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெத்தாட தீர்மானித்தது. ஆரம்பத்தில் இலங்கை அணி 25 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் சுரங்க மற்றும் சந்தன இடையில் ஏற்பட்ட 185 ஓட்ட இணைப்பாட்டத்தின் உதவியோடு இலங்கை அணி 40 ஓவர்களுக்கும் 369 ஓட்டங்களை பெற்றது. 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசிய சுரங்க 84 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சந்தன 27 பௌண்டரிகளோடு 190 ஓட்டங்களை பெற்றார்.

இந்தியாவிடம் ஒருநாள் தொடரையும் இழந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

பந்துவீச்சில் இந்திய கட்புலனற்றோர் அணி சார்பில் ஆர். அஜே 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த சூழலில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் ஜி. அணில்பாய் மற்றும் எம். தீபக் ஜோடி ஆரம்ப விக்கெட்டுக்கு 299 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வெற்றியை தமது பக்கம் ஆக்கினர்.

இலங்கை அணித்தலைவர் எஸ். பதும் கடைசி முயற்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அது இந்திய அணியின் வெற்றியை தவிர்க்க அது போதுமாக இருக்கவில்லை. தீபக் ஆட்டமிழக்காது 164 ஓட்டங்களை பெற்றதோடு இந்திய அணி 35 ஆவது ஓவரில் வெற்றி இலக்கான 370 ஓட்டங்களை எட்டியது. அணில்பாய் 120 ஓட்டங்களை பெற்றார்.    

இந்த வெற்றியுடன் இந்திய கட்புலனற்றொர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வைட் வொஷ் செய்தது.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 369 (40) – டி. சந்தன 190*, எஸ். சுரங்க  84, ஆர். அஜே 2/58, எம். தீபக் 1/64

இந்தியா – 370 (34.4) – எம். தீபக் 164*, ஜி. அணில்பாய் 120,  ஆர். சுனில் 39*, எஸ். பதும் 2/70

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<