அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைப்பாரா கோஹ்லி?

199

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். மேலும் அஷ்வின் மீண்டும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அங்கு அவுஸ்திரேலிய அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் விளையாடி வருகின்றது. இரண்டாவது தொடரான டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 எனும் அடிப்படையில் முன்னியில் உள்ளது.

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137…

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, பதிலுக்கு இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்பேர்னில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தொடர்ந்தும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான தீவிர பயிற்சிகளில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த போட்டியானது நாளை (03) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி அதிகாலை 05.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியை பொறுத்த வரையில் அவுஸ்திரேலிய அணிக்கு தொடர் தோல்வியிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான போட்டியாக அமைந்திருக்கின்றது. இந்திய அணியானது நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியை சமநிலை செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ அவுஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி என்ற 70 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைக்கும்.

1947 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடர் கூட அந்த மண்ணில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ், சௌரவ் கங்குலி, எம்.எஸ் டோனி ஆகியோரால் படைக்க முடியாமல் போன குறித்த சாதனையை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி படைப்பதற்கான வாய்ப்பு கைக்கு எட்டியுள்து.

இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் சந்தித்த டெஸ்ட் போட்டித் தொடர்களின் முடிவுகள் பின்வருமாறு,

1947-48 – அவுஸ்திரேலியா 4 வெற்றிகள், இந்தியா 0, சமநிலை 1

1967-68 – அவுஸ்திரேலியா 4 வெற்றிகள், இந்தியா 0

1977-78 – அவுஸ்திரேலியா 3 வெற்றிகள், இந்தியா 2 வெற்றிகள்

1980-81 – அவுஸ்திரேலியா 1 வெற்றி, இந்தியா 1 வெற்றி, சமநிலை 1

1985-86 – அவுஸ்திரேலியா 0, இந்தியா 0, சமநிலை 3

1991-92 – அவுஸ்திரேலியா 4 வெற்றிகள், இந்தியா 0, சமநிலை 1

1999-2000 – அவுஸ்திரேலியா 3 வெற்றிகள், இந்தியா 0

2003-04 – அவுஸ்திரேலியா 1 வெற்றி, இந்தியா 1, சமநிலை 2

2007-08 – அவுஸ்திரேலியா 2 வெற்றி, இந்தியா 1 வெற்றி, சமநிலை 1

2011-12 – அவுஸ்திரேலியா 4 வெற்றிகள், இந்தியா 0

2014-15 – அவுஸ்திரேலியா 2 வெற்றிகள், இந்தியா 0, சமநிலை 2

ஏன் டெஸ்ட் அந்தஸ்து கொண்ட அணிகளில் ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நான்கு அணிகளில்  எந்தவொரு ஆசிய அணியும் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்பதும் இங்கே  குறிப்பிடத்தக்கது.

2018 டெஸ்ட் துடுப்பாட்டத்தில் விராட் கோஹ்லி, பந்துவீச்சில் ககிஸோ ரபாடா முதலிடம்

2018ஆம் ஆண்டு முடிவில் ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தரப்படுத்தல்களின்படி துடுப்பாட்டத்தில்…

இது இவ்வாறு இருக்க இந்திய அணியானது போட்டியில் வெற்றி பெறுவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாளை அவுஸ்திரேலிய அணியை எதிர்நோக்கவுள்ள போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை இன்று (02) BCCI அறிவித்துள்ளது.

அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இஷாந்த் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தை நிரப்புவதற்காக உமேஷ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பிரகாசிக்காத கே.எல் ராகுல் மீண்டும் 13 பேர் கொண்ட அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். ஏன் அவர் உள்வாங்கப்பட்டார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியதன் காரணமாகவே ராகுல் அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.

ஆசிய கிண்ண தொடரில் உபாதைக்குள்ளாகி ரஞ்சி கிண்ண தொடரில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா அழைக்கப்பட்ட ஹார்த்திக் பாண்டியாவுக்கு இறுதியில் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

மேலும் உபாதை காரணமாக கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்காக தமிழக வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் 13 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார். இருந்தாலும் இவர் போட்டியில் விளையாடுவார என்பது நாளை போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே தீர்மானிக்கப்படும் என BCCI அறிவித்துள்ளது.

சிட்னி மைதானமானது துடுப்பாட்ட வீரர்களுக்கும், சுழல் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக காணப்படுவதானால் அஷ்வின் விளையாடும் 11 பேர் அணிக்குள் தெரிவாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மனைவி குழந்தை பிரசவித்ததன் காரணமாக  இந்தியா சென்றிருந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியா திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது போட்டிக்கான இந்திய அணி குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), அஜிங்கியா ரஹானே, கே.எல் ராகுல், மாயங் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹம்மட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, உமேஷ் யாதவ்

ஐ.சி.சி இனால் இலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்

கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட்…

அவுஸ்திரேலிய அணியிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் சகலதுறை வீரர் மார்னஸ் லாபுஸ்சன்னே அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதனால் மிட்செல் மார்ஷ் நீக்கப்படலாம். மேலும் தொடர்ந்து பிரகாசிக்கத்தவறும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரோன் பிஞ்ச் அணியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<