ஒருநாள் கிண்ணமும் புனித பத்திரிசியார் கல்லூரி வசம்

529

பொன் அணிகளின் போர் எனப்படும் சமரில் பங்கெடுக்கும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் இடையிலான 30ஆவது ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்திற்கான ஒரு நாள் கிரிக்கெட் பெரும் போட்டியில், புனித பத்திரிசியார் கல்லூரி 05 ஓட்டங்களால் திரில் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

கடந்த வாரம் இரு பாடசாலை அணிகளுக்கும் இடையிலான 106ஆவது பொன் அணிகளின் போர் (இரண்டு நாள் போட்டி) நடைபெற்ற நிலையில், அதில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட் பெரும் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியினை அதன் சொந்த மைதானத்தில் வைத்து சனிக்கிழமை (04) எதிர்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு ஆரம்பவீரர்களான I. ஜெஸ்ரிகன்      மற்றும் M. சௌத்ஜன் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 225 ஓட்டங்கள் எடுத்தது.

புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜெஸ்ரிகன், சௌத்ஜன் ஜோடி இந்த போட்டி வரலாற்றில் புதிய ஒரு சாதனையை நிலைநாட்டினர். இவ்விருவரும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 151 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதற்கு முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டு புனித பத்திரிசியார் கல்லூரியின் பானுஜயன் மற்றும் திவாகரன் ஆகியோர் பெற்ற 60 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டத்தில் M. சௌத்ஜன் 94 பந்துகளை எதிர்கொண்டு 04 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் I. ஜெஸ்ரிகன் 7 பௌண்டரி ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாண கல்லூரி அணியின் பந்துவீச்சில் S. நர்த்தனன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ரொய்ஸ் ஜென்சன் மற்றும் பிருந்தன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

ஊடக உரிமத்திற்கான மனுக்களை கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 226 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண கல்லூரி அணி இறுதி வரை போராடிய நிலையில் அவ்வணியினால் 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 220 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதனால் யாழ்ப்பாண கல்லூரி போட்டியில் வெறும் 5 ஓட்டங்களால்  தோல்வியினை தழுவியது.

யாழ்ப்பாண கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் S. மதுசன் அரைச்சதம் கடந்து 06 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை T. டேமியன் 34 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பிற்காக போராடியிருந்தார்.

மறுமுனையில் புனித பத்தரிசியார் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய M. சௌத்ஜன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், S. கீர்த்தன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித பத்திரிசியார் கல்லூரி – 225 (47.5) M. சௌத்ஜன் 82, I. ஜெஸ்ரிகன் 47, S. நர்த்தனன் 48/3, B. பிருந்தன் 16/2, ரொய்ஸ் ஜென்சன் 57/2

யாழ்ப்பாண கல்லூரி – 220 (49.5) S. மதுசன் 62, M. சௌத்ஜன் 34/3, S. கீர்த்தன் 30/2

முடிவுபுனித பத்திரிசியார் கல்லூரி 5 ஓட்டங்களால் வெற்றி

விருதுகள்

  • ஆட்டநாயகன் – M. சௌத்ஜன் (புனித பத்திரிசியார் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்டவீரர் –  M. சௌத்ஜன் (புனித பத்திரிசியார் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – S. நர்த்தனன் (யாழ்ப்பாண கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – P. பிரதீப் (யாழ்ப்பாண கல்லூரி)
  • சிறந்த சகலதுறைவீரர் – S. மதுசன் (யாழ்ப்பாண கல்லூரி)
  • சிறந்த இணைப்பாட்டம் – M. மதுசன் & I. ஜெஸ்ரிகன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

சிறப்பு விருதுகள்

  1. I. ஜெஸ்ரிகன் (புனித பத்திரிசியார் கல்லூரி)
  2. B. பிருந்தன் (யாழ்ப்பாண கல்லூரி)

கிரிக்கெட்டின் புனித விருது (Spirit of Cricket)

  1. T. டேமியன் (யாழ்ப்பாண கல்லூரி)
  2. S. கீர்த்தன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<