இந்திய வீரர்களுக்கு பயிற்றுவிக்க தயார் என்கிறார் சொஹைப் அக்தார்

105
espncricinfo

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சொஹைப் அக்தார் தெரிவித்துள்ளார். 

சமுகவலைத்தளமான ஹெலோ செயலியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றின் போதே, இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார் சொஹைப் அக்தார். 

சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC

கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் …………

சொஹைப் அக்தார் தன்னுடைய வேகப் பந்துவீச்சு அறிவினை பகிர்ந்துக்கொள்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க தயாரில்லை என குறிப்பிட்டுள்ளதுடன், அதிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் பயிற்றுவிக்க தயார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட சொஹைப் அக்தார், “நிச்சயமாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பேன். எனது அறிவினை பகிர்ந்துக்கொள்வது எனது தொழில். நான் கற்றுக்கொண்ட விடயங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், வாய்ப்பு கிடைத்தால் இப்போது இருக்கும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை மேலும், வேகம் கொண்ட வலுவான வேகப் பந்துவீச்சாளர்களாக மாற்றுவேன்” என்றார்.

இந்திய அணியில் ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் ஷமி, இசாந் சர்மா, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் என உலகத் தரம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சொஹைப் அக்தார் சர்வதேச கிரிக்கெட்டில் 12 வருடங்கள் விளையாடியுள்ளார். எனவே, இவர் போன்ற ஒருவரின் அனுபவம் இந்திய அணிக்கு உதவக்கூடியதாக அமையும்.

சொஹைப் அக்தார் 1998ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில், சச்சின் டெண்டுல்கரின் சந்திப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

“சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் எவ்வளவு பிரபலமானவர் தொடர்பில் எனக்கு தெரியாது. சென்னைக்கு வந்த பிறகுதான், கிரிக்கெட்டின் கடவுளாக சச்சின் கொண்டாடப்படுகிறார் என்பதை அறிந்தேன். சச்சின் எனக்கு மிக நெருங்கிய நண்பர். 1998ம் ஆண்டு நான் வேகமாக பந்துவீசும் போது, இந்திய மக்களும் என்னுடன் சேர்ந்து கொண்டாடினர். எனக்கு இந்தியாவில் ரசிகர் பட்டாளமும் இருந்தது” என்றார்.

இதேவேளை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் நஷீர், இந்திய அணியின் வீரேந்தர் செவாக்கை விட திறமை வாய்ந்த துடுப்பாட்ட வீரர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“இம்ரான் நஷீருக்கு, வீரேந்தர் செவாக்கை போன்ற துடுப்பாட்டத்தை சரியாக பயன்படுத்தும் அறிவு இருக்கவில்லை என நினைக்கிறேன். அதேபோன்று. செவாக்கிற்கு, நஷீர் போன்ற திறமையிருக்கவில்லை. திறமை அடிப்படையில் பார்க்கும் போது, செவாக்கை விட இம்ரான் நஷீர் சிறந்தவர்.

ஆனால், எமது கிரிக்கெட் சபை அவரை சரியாக பயன்படுத்தவில்லை. நஷீரை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தால், அவர் செவாக்கை விட, மிக சிறந்த வீரராக மாறியிருப்பார். நான் பலமுறை கிரிக்கெட் சபையிடம், இம்ரான் நஷீரை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட போதும், கிரிக்கெட் சபை அதற்கு செவி சாய்க்கவில்லை” என மேலும் சுட்டிக்காட்டினார்.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<