ஆசியக்கிண்ணம் தொடர்பில் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

Asia Cup 2022

346

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக்கிண்ணத்தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசியக்கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் உள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதிவரை தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SLC அழைப்பு T20 தொடருக்கான அணிக்குழாம்கள் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கவனத்தில் கொண்டு இலங்கையில் ஆசியக்கிண்ணத் தொடரை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த போதும், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடர் மாற்றப்பட்டுள்ளதாக ஆசியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவர் ஜெய் ஷா குறிப்பிடுகையில், “ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, மேலும் பல ஆலோசனைகளுக்குப் பிறகு இடத்தை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் நிறைவுக்கு வருகிறதா? கூறும் மெதிவ்ஸ்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டி நடைபெற்றாலும், போட்டியை நடத்தும் உரிமம் இலங்கை கிரிக்கெட்டிடம் உள்ளது.  உலகக்கிண்ண தயார்படுத்தல்களுக்காக ஆசியக்கிண்ணத் தொடரை நடத்துவது மிகவும் முக்கியம். இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைகளின் புரிந்துணர்வுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்கனவே ஒரு தடவை ஆசியக்கிண்ணத்தொடர் நடைபெற்றுள்ளது. 2018ம் ஆண்டு ஆசியக்கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒருநாள் தொடராக நடைபெற்றிருந்தது. இம்முறை தொடர் நடைபெற்றால் T20I போட்டிகளாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<