டி20 போட்டிகளில் பந்துவீசத் தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

154

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் காலத்துக்கு காலம் உருவாகின்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்கள் வரிசையில் கடந்த 20 வருடங்களாக யாராவது 2 வீரர்கள் பிரபல்யமடைந்த வீரர்களாக காணப்பட்டனர். 

ஆனால் அண்மைக்காலமாக அவ்வாறனதொரு நிலையை இலங்கை அணியில் காணமுடியாவிட்டாலும், அஞ்செலோ மெதிவ்ஸ் தனியொரு ஆளாக இலங்கை அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

சதம் விளாசிய ஓஷதவுக்கு டெஸ்ட் தரவரிசையில் பாரிய முன்னேற்றம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ….

எனினும், அவருக்கு அடிக்கடி ஏற்படுகின்ற திடீர் உபாதைகள் காரணமாக அணியில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொள்வதிலும், ஒரு சகலதுறை வீரராக பந்துவீசுவதை தவிர்த்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. 

தற்போதுள்ள இலங்கை அணியில் சிறந்த டெஸ்ட் துடுப்ப்பாட்ட சராசரியைக் கொண்ட வீரர் தான் அஞ்செலோ மெதிவ்ஸ். 84 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள், 34 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 43.87 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். 

எனினும், பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. இதில் ராவல்பின்டியில் நடைபெற்ற டெஸ்;ட்டில் 31 ஓட்டங்களையும், கராச்சி டெஸ்ட்டில் முறையே 13 மற்றும் 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார். 

எது எவ்வாறாயினும், டெஸ்ட் அரங்கில் 5704 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், இதுவரை 214 ஒருநாள் போட்டிகளிலும், 72 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

எனவே இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களில் அதிகளவு சராசரியைக் கொண்டுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், அண்மைக்காலமாக இலங்கை டி20 அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றார். இதற்கான முக்கிய காரணமாக அவர் பந்துவீசுவதில்லை என்ற குற்றச்சாட்டை தேர்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு டி20 போட்டிகளில் பந்துவீசத் தயாராக இருப்பதாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கராச்சியில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போதே அங்கு சென்றிருந்த இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அஞ்செலோ மெதிவ்ஸ்,

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்துக்கான அதிக பளுவை சுமக்க நேரிட்டுள்ளதால் பந்துவீசுவதை தவிர்த்துள்ளேன். 

எனினும், நியூசிலாந்துடளான சுற்றுப்பயணத்தின் பிறகு டி20 போட்டிகளில் பந்துவீச வேண்டும் என தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். எனவே நான் டி20 போட்டிகளில் மீண்டும் பந்துவீச எண்ணியுள்ளேன். 

கடந்த சில மாதங்களாக அதற்கான வலைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டேன். நிச்சயம் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தெரிவாகினால் பந்துவீசுவேன் என அவர் தெரிவித்தார். 

அணியில் உள்ள சிரேஷ்ட வீரராக நீங்கள் இளம் வீரர்களுக்கு எந்தளவில் உதவி செய்கிறீர்கள்?

அழுத்தம் என்பது எந்தப் போட்டியில் விளையாடினாலும் இருக்கும். ஆனால் சிரேஷ்ட வீரர் என்ற வகையில் எப்போதும் அழுத்தம் தான் இருக்கும். அது காலத்துக்கு காலம் வித்தியாசப்படும். 

குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் காலத்தில் நாங்கள் இளம் வீரர்களாக இருந்தோம். இதனால் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்தனர். 

இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷின் ஒரு அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சென்ற இலங்கை …….

தற்போது அந்தப் பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே சிரேஷ்ட வீரராக அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன்.  

அனைத்துவகைப் போட்டிகளிலும் இலங்கை அணியில் உள்ள அதிகளவு துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட வீரராக தற்போது டெஸ்ட் போட்டிகளில் 4 ஆவது அல்லது 5 ஆவது இலக்கங்களில் களமிறங்குகிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்?

கடந்த சில போட்டிகளில் நான் 4 ஆவது இலக்கத்தில் களமிறங்கி வருகிறேன். இதற்கு முன் 5 ஆவது அல்லது 6 ஆவது இலக்கங்களில் தான் நான் விளையாடி வந்தேன். எனவே முன்வரிசை வீரராக துடுப்பாட கிடைத்தமை மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளதுடன், நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்று அணிக்காக ஓட்டங்களைக் குவிக்க எதிர்பார்த்துள்ளேன்.

அதேபோல, கடந்த வருடம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதமடித்ததன் பிறகு துரதிஷ்டவசமாக உபாதைக்கு உள்ளாகினேன். 

இதனால் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான போட்டித் தொடர்களில் பங்குபற்ற முடியாமல் போனது. எனவே இனிவரும் காலங்களில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றால் அணிக்காக ஓட்டங்களைக் குவிப்பேன்.  

நீங்கள் ஒரு சில மாதங்களாக பந்துவீசாமல் இருந்து கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடனான உலகக் கிண்ணப் போட்டியில் பந்துவீசி இலங்கை அணிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தீர்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக் கிண்ணப் போட்டியொன்றில் வெற்றி பெறுவது தான் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். சுமார் 8 மாதங்கள் பந்துவீசாமல் இருந்துவிட்டு உடனடியாக அணியின் தேவைகருதியே  பந்துவீசத் திர்மானித்தேன்.

எனவே உபாதைக்குள்ளாகினாலும் பரவாயில்லை என்று திமுத்திடம் கூறிவிட்டு தான் பந்துவீசினேன். அதற்கான தக்க பலனும் கிடைத்தது. 

இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் உங்களுக்கு பந்துவீச வேண்டாம். துடுப்பாட்ட வீரராக விளையாடும்படி தேர்வாளர்கள் அனுமதி வழங்கினர். 

தற்போது டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கு தேர்வாளர்கள் பந்துவீச வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். உண்மையில் நீங்கள் பந்துவீசினால் மீண்டும் உபாதைக்கு முகங்கொடுப்பீர்களா?

நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசுவதில்லை. நியூசிலாந்துடனான போட்டித் தொடரின் பிறகு தேர்வாளர்கள் என்னை அழைத்து டி20 போட்டிகளில் பந்துவீச வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

எனவே அவர்களது வேண்டுகோளுக்கு என்னால் மறுப்பு தெரிவிக்க முடியாது. எனவே இனிவரும் காலங்களில் டி20 போட்டிகளில் நான் பந்துவீசவுள்ளேன். கராச்சி டெஸ்ட் போட்டிக்காக வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்த போது நான் பந்துவீச்சு பயிற்சிகளையும் முன்னெடுத்தேன். உடனடியாக பந்துவீசுவதென்பது கடினமாக உள்ளது. எனினும், எதிர்வரும் காலத்தில் டி20 அணிக்குத் தேர்வாகினால் நிச்சயம் பந்துவீசுவேன்.

பந்துவீசினால் நீங்கள் மீண்டும் உபாதைக்கு உள்ளாகும் அச்சம் உங்களுக்கு இருக்கின்றதா?

தற்போது என்னால் பந்துவீச முடியும். ஆனால் உபாதை ஏற்படும் அச்சம் இருந்தால் அணித் தலைவர் மற்றும் தேர்வாளர்களுக்கு தெரியப்படுத்துவேன். எனினும், தற்போதுள்ள நிலைமையில் என்னால் டி20 போட்டிகளில் பந்துவீச முடியும். 

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பயிற்சிகளை எடுத்ததன் காரணமாகவா நீங்கள் தற்போது உடல் பருமனை குறைத்து இருக்கின்றீர்கள்?

ஆம். கடந்த சில மாதங்கள் எனக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. இதனால் எனது உடல்தகுதி குறித்து அதிக கவனம் செலுத்தினேன். தற்போது நான் 7 கிலோ கிராம் எடையைக் குறைத்துள்ளேன்.   

மிக்கி ஆர்தரின் வருகையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

என்னைப் பொறுத்தமட்டில் அணியை கட்டியெழுப்புவது முதல் வீரர்களை சரியான முறையில் இனங்காண்பது வரை பயிற்சியாளர்களுக்கு தான் பொறுப்பு உண்டு. 

உண்மையில் அந்தப் பொறுப்பை மிக்கி ஆர்தர் சிறப்பாக செய்து வருகின்றார். எனவே எதிர்காலத்தில் அவர் இலங்கை கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். 

உளரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் விளையாட்டில் வீரர் ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் ……….

கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் என்ன சாதிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்கள்?

நான் நிறைய விடயங்களை தலையில் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு போட்டித் தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் எள்று தான் நினைப்பேன். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இவ்வளவு ஓட்டங்களைத் தான் குவிக்க வேண்டும் என நான் சிந்திக்கவில்லை. எனினும், ஒவ்வொரு வீரருக்கும் இலக்குகள் இருக்கத் தான் வேண்டும். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காகும்.

அதற்கு முன் எனது உடல்தகுதியை நல்ல முறையில் வைத்துக் கொள்ள மிக அவதானத்துடன் இருக்கிறேன். அதற்காக தொடர்ந்து பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

நன்றி – அசேல விதான

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<