ஹேரத்தை சீண்டிய என்டர்சனுக்கு ஐ.சி.சி. கண்டிப்பு

1580
James Anderson

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டத்தில் ஜேம்ஸ் எண்டர்சன் ஐ.சி.சி. விதிமுறையை மீறியதாகக் கண்டிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 288 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இந்த ஓட்டங்களை அடைய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹேரத்தின் துடுப்பாட்டம் பெரிதும் உதவியது. அவர் 49 பந்துகளை சந்தித்து 31 ஓட்டங்களை எடுத்தார். இவர் குசல் பெரேராவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்காக 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இறுதிநாளில் இலங்கை அணி வெற்றிபெற 330 ஓட்டங்கள் தேவை

இதனால் கடுப்பான இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் பந்து வீசிக்கொண்டு ஹேரத்தை சீண்டிக்கொண்டே இருந்தார். இதைக் கவனித்த மைதான நடுவர் எஸ். ரவி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எண்டர்சனிடம் கூறினார். அப்போது ரவியிடம் எண்டர்சன் முறைத்துக்கொண்டார்.

இதனால் மைதான நடுவர்களான எஸ். ரவி, ரொட் டக்கர் மற்றும் 3ஆவது நடுவர் ஆகியோர் எண்டர்சன் மீது குற்றம் சாட்டினார்கள். விசாரணையில், வீரர்களின் நன்னடத்தை மற்றும் வீரர்கள் போட்டியின் கண்ணியத்தைக் காப்பாற்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி.யின் விதியில் 2.1.1-ல் கூறியதை மீறியதாகத் தெரியவந்தது.

இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஐ.சி.சி.யின் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். இதனால் அவரது செயல்பாடு லெவல் 1-க்குள்தான் வரும் என்பதால் ஐ.சி.சி. அவரை கண்டித்து அத்துடன் விட்டுள்ளது.

லெவல் 1-ஐ மீறுபவர்களுக்கு எச்சரிக்கை, கண்டிப்பு அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீத அபராதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தண்டனையாக வழங்கலாம் என்பது விதிமுறை.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்