துபாயில் நேற்று (29) நடைபெற்ற 2026 மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரின் தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு இராச்சியம் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சம்பியனான இலங்கை மகளிர் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பலன் அளிக்கும் வகையில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு, ஐக்கிய அரபு இராச்சிய அணியை 79 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலுக்கு, சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சேத்தனா விமுக்தி தலைமை தாங்கினார். அவர் தனது கன்னிப் போட்டையிலேயே 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அவருடன் இணைந்து பந்துவீசிய மிதாலி அயோத்யா, 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது சர்வதேச டி20 வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சுப் பதிவை எட்டினார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் மீண்டும் காவ்யா காவிந்தி
இதன்படி, 80 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை மகளிர் அணி, 7.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை மிக இலகுவாக அடைந்தது.
அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், இமேஷா துலானி 25 ஓட்டங்களையும் குவித்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக சேத்தனா விமுக்தி தெரிவானார்.
இலங்கை மகளிர் அணி தனது 2ஆவது லீக் போட்டியில் இந்தோனஷிய மகளிர் அணியை எதிர்வரும் 2ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ஐக்கிய அரபு இராச்சியம்: 19.5 ஓவர்களில் 79/10 – (மிதாலி அயோத்யா 3/14, சேத்தனா விமுக்தி 3/16, சுகந்திகா குமாரி 2/18)
இலங்கை: 7.5 ஓவர்களில் 80/1 – (சமரி அத்தபத்து 48*, இமேஷா துலானி 25)
முடிவு: இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















