பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை மகளிர் அணி சாதனை 

Pakistan Women’s Tour of Sri Lanka 2026

2
Pakistan Women’s Tour of Sri Lanka 2026

சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (28) நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டம், சேதனா விமுத்தி, கவிஷா தில்ஹாரியின் அபார பந்துவீச்சு மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹசினி பெரேரா ஆகிய இருவரினதும் அரைச் சதங்கள் இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் கட்டுக் கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 40 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவி பாத்திமா சனா 49 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குல் பெரோசா 35 பந்துகளில் 40 ஓட்டங்களையும், முனீபா அலி 34 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் நஜிஹா அல்வி 30 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சேதனா விமுத்தி, கவிஷா தில்ஹாரி மற்றும் அணித்தலைவி சமரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 188 ஓட்டங்கள் என்ற இலகு வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹசினி பெரேரா மற்றும் சமரி அத்தபத்து ஆகியோரின் சிறப்பான அரைச் சதங்களின் உதவியுடன் 38 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை இலகுவாக எட்டியது.

நிதானமாக ஆடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 92 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய சமரி அத்தபத்து 38 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாசினார். ஹசினி பெரேரா 50 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 12 ஓட்டங்களையும் எடுத்து ங்களித்தனர்.

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டிய நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தற்போது 3ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது.

இதனிடையே, 3ஆவது ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகியாக சமரி அத்தபத்து தெரிவாக, தொடர் நாயகி விருதை ஹர்ஷிதா சமரவிக்ரம பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<