மெஸ்ஸியின் சர்வதேச பயணம் நிறைவுக்கு வருகிறதா?

FIFA World Cup 2026

6
FIFA World Cup 2026

உலக உதைபந்தாட்ட வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் அர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச உதைபந்தாட்டப் பயணம் நிறைவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி தற்போது உலகளாவிய ரீதியில் எழுந்துள்ளது.

>>சர்வதேச கால்பந்தில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மார்<<

அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் அமைந்துள்ள மெட்லைப் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இடம்பெற்ற 2026 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில், மேலதிக நேரத்தில் ஸ்பெயின் அணி பெற்ற ஒரேயொரு கோலின் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. 106ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரான் டோரெஸ் பெற்ற வெற்றிக் கோலே இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை தீர்மானித்தது.

39 வயதான மெஸ்ஸி இப்போட்டியில் 120 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்று போராடினார். போட்டியின் பின்னர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்ட வேளையில் அவர் கண்ணீர் மல்க காணப்பட்டமை, அவரது சர்வதேசப் பயணம் நிறைவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அதேநேரம் மெட்லைப் அரங்கு மெஸ்ஸியின் வாழ்க்கையில் தனித்துவமான இடத்தை வகிக்கின்றது. 2016ஆம் ஆண்டு இதே மெட்லைப் அரங்கில் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் தோல்வியடைந்ததையடுத்து, மெஸ்ஸி சர்வதேச உதைபந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். எனினும் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்ட அவர், 2021 கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும், 2022 உலகக்கிண்ணத்தையும், 2024 கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் அர்ஜென்டினா அணிக்கு பெற்றுத் தந்து வரலாறு படைத்தார்.

2026 உலகக்கிண்ணம் மெஸ்ஸியின் ஆறாவது உலகக்கிண்ணப் போட்டித் தொடர் என்பதுடன், ஆடவர் உதைபந்தாட்ட வரலாற்றில் மூன்று உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் ஆரம்ப அணியில் களமிறங்கிய முதலாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இத்தொடரில் 8 கோல்களைப் பெற்றதுடன், 4 கோல்களுக்கு உதவியும் புரிந்திருந்தார்.

தோல்வியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மெஸ்ஸி, தனது ஓய்வு தொடர்பில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட உணர்வுபூர்வமான செய்தியும் ஓய்வு ஊகங்களுக்கு மேலும் வலுச்சேர்த்தது.

“இத்தனை வருடங்களின் சிறந்த விடயம் வெறும் கிண்ணங்கள் மட்டுமல்ல, முழுப்பயணமுமே” என அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியிடம் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் வினவப்பட்ட போது, “எனக்குத் தெரியாது. அவர் எப்போதும் ஆச்சரியப்படுத்துபவர்” என பதிலளித்திருந்தார். “அவர் விரும்பும் வரை தொடர்ந்து விளையாடுவார்” எனவும் ஸ்கலோனி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி தற்போது இன்டர் மயாமி கழகத்துடன் 2028ஆம் ஆண்டு வரையான ஒப்பந்தத்தில் உள்ளார். எதிர்வரும் கோப்பா அமெரிக்கா தொடர் வரையாவது அவர் தேசிய அணிக்காக விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கிண்ண மேடையில் மெஸ்ஸியின் பயணம் நிறைவுக்கு வந்திருக்கலாம் எனினும், அர்ஜென்டினா அணிக்கான அவரது இறுதி விடைபெறல் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்புக்காக உலக உதைபந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<