லங்கா பிறீமியர் லீக்கில் களமிறங்கும் முன்னணி அணிகளில் ஒன்றான கண்டி அணி, இம்முறை போட்டித் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் முதலீட்டாளரும், தொழில்முனைவோருமான சந்தியா அஜ்ஜாரபுவின் (Sandhya Ajjarapu) உரிமையின் கீழ் கண்டி றோயல்ஸ் என்ற புதிய பெயருடன் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, உயிரியல் தொழில்நுட்பம், உயிரியல் எரிபொருள், தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள், விளையாட்டு மற்றும் ஊடகம் உள்ளிட்ட பன்முகத் துறைகளில் முதலீடு செய்துள்ள சந்தியா அஜ்ஜாரபு, தனது உலகளாவிய அனுபவத்தின் மூலம் கண்டி றோயல்ஸ் அணியை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு செல்லவுள்ளார்
அதுமாத்திரமின்றி, லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஆறாவது அத்தியாயத்திற்குத் தயாராகி வரும் கண்டி றோயல்ஸ் அணிக்கு, இப்புதிய உரிமையாளர் மாற்றம் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சந்தியா அஜ்ஜாரபு தனது நீண்டகால முதலீட்டு அனுபவம், பொதுச் சந்தை தொடர்பான அறிவு, தொழில்முறை தலைமைத்துவம் மற்றும் விளையாட்டை சமூக மாற்றத்திற்கான தளமாகப் பயன்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சந்தியா, பொதுப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான முதலீட்டு அனுபவத்தைக் கொண்டவர். அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளை இவர் கொண்டிருப்பதுடன், புளோரிடாவில் பதிவுசெய்யப்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் அதிகாரி மற்றும் பணிப்பாளர் பொறுப்புகளையும் வகித்து வருகிறார். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் சமூக சுகாதாரம் மற்றும் கல்விச் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கும் இவர் உதவி செய்து வருகிறார்.
- ஜப்னா கிங்ஸ் அணியில் களமிறங்கும் பானுக, துனித் வெல்லாலகே
- LPL தொடர் 2026; முழுமையான போட்டி அட்டவணை வெளியீடு
புதிய உரிமையாளரை வரவேற்றுப் பேசிய லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல, “லங்கா பிறீமியர் லீக்கின் ஆறாவது அத்தியாயத்தில், கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றுள்ள சந்தியா அஜ்ஜாரபு அவர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பெருமையுடன் வரவேற்கிறது. கண்டி என்பது அதிக ரசிகர்களைக் கொண்ட மிக முக்கியமான ஒரு கிரிக்கெட் பிராந்தியமாகும். சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்ட முதலீட்டாளர்கள் லங்கா பிறீமியர் லீக் மீது நம்பிக்கை வைத்திருப்பதை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, இத் தொடரை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற டி20 லீக்காக வலுப்படுத்துவதற்கு நாம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இது மேலும் பக்கபலமாக அமையும்,” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஐ.பி.ஜி குளோபல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அனில் மோகன் பேசுகையில், “பிராஞ்சைஸ் கிரிக்கெட்டின் வணிக ரீதியான மற்றும் சமூக ரீதியான மதிப்பை உணர்ந்துகொண்ட முதலீட்டாளர்களை லங்கா பிறீமியர் லீக் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சந்தியா அஜ்ஜாரபு அவர்களின் வலுவான முதலீட்டு அனுபவம், வணிக ஒழுக்கம் மற்றும் நீண்ட கால தொலைநோக்குப் பார்வை ஆகியவை கண்டி றோயல்ஸ் அணியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த லங்கா பிறீமியர் லீக் தொடரின் கட்டமைப்பிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும்,” என்றார்.
இந்த நிலையில் தனது புதிய அணி குறித்து கண்டி றோயல்ஸ் உரிமையாளர் சந்தியா அஜ்ஜாரபு கூறுகையில், “கிரிக்கெட் விளையாட்டு, சமூகம் மற்றும் நீண்ட கால விளையாட்டு மதிப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே கண்டி றோயல்ஸ் அணியை நான் பார்க்கிறேன். ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணக்கூடிய, இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆதரவளிக்கக்கூடிய மற்றும் லங்கா பிறீமியர் லீக் தொடரின் வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்கக்கூடிய ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் அணியாக இதனை உருவாக்குவதிலேயே எங்களது முழுக் கவனமும் இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















