சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இளம் சகலதுறைவீரர்

Indian Premier League 2026

1
INDIAN PREMIER LEAGUE 

இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சகலதுறை வீரரான மேக்நீல் நோரோன்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>T20 உலகக் கிண்ணம் 2026; பங்களாதேஷின் வெளியேற்றத்தை ஆராய குழு<<

கடந்த 03ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராமகிருஷ்ணா கோஷ் காலில் எலும்பு முறிவு உபாதைக்கு முகம் கொடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதன்படி மேக்நீல் நோரோன்ஹா சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் உபாதைக்குள்ளாகிய ராமகிருஷ்ணா கோஷிற்கு பிரதியீடாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் கிரிக்பஸ் (Cricbuzz) செய்தி இணையதளத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெறும் 24 வயது நிரம்பிய நோரோன்ஹா, 2025ஆம் ஆண்டுக்கான மகாராஜா கிண்ண T20 தொடரில் மங்களூரு ட்ரகன்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் 253 ஓட்டங்கள் மற்றும் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பருவத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பல வீரர்களை உபாதை காரணமாக இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. கலீல் அஹமட் மற்றும் ஆயுஷ் மாத்ரே IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்துள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் டோனியும் இன்னும் தசை உபாதை காரணமாக 2026ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஒரு போட்டியில் கூட இம்முறை விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<