முதலாவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

1797

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (05) நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லுவிஸ் (D/L) முறைப்படி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.  

கொழும்பு பி.சரா ஓவல் தைானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயித்த 288 என்ற வெற்றி இலக்கினை நோக்கி இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியது. இதில் 16.2 ஓவர்கள் நிறைவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி, போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்துடன் மோதும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் வெளியீடு

இதனையடுத்து, சற்று தாமதமாக ஆரம்பித்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு, டக்வத் லுவிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 275 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 35.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டது.  இதன்படி இங்கிலாந்து அணிக்கு டக்வத் லுவிஸ் முறைப்படி 43 ஓட்டங்களால் வெற்றி வழங்கப்பட்டது.

போட்டியின் முதலில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இலங்கை அணியின் ஒருநாள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் உட்பட குழாமில் இடம்பெற்றுள்ள சதீர சமரவிக்ரம மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இந்த போட்டியில் விளையாடினர்.

இவர்களுடன் குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன மற்றும் இசுறு உதான ஆகிய முன்னணி வீரர்களும் இந்த போட்டியில் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காக விளையாடியிருந்தனர். இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.

திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பின்னர் இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, ஒருநாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் 77 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இவர்கள் இருவரின் அரைச்சதங்கள், இசுறு உதானவின் 40 ஓட்டங்கள் மற்றும் லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன ஆகியோரின் பங்களிப்புடன் இலங்கை தரப்பு 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், மொயின் அலி 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மார்க் வூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜொனி பெயார்ஸ்டோவ் 2 ஓட்டங்களுடனும், ஜேசன் ரோய் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவர் இயன் மோர்கன் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர். போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 215 ஆக உயர்த்தினர்.

இதில் ஜோ ரூட் 92 பந்துகளுக்கு 90 ஓட்டங்களையும், இயன் மோர்கன் 84 பந்துகளுக்கு 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இங்கிலாந்து அணி டக்வத் லுவிஸ் முறைப்படி முதலாவது பயிற்சிப் போட்டியை 43 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. இலங்கை அணியின் பந்து வீச்சில் கசுன் ராஜித மற்றும் இசுறு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது பயிற்சிப் போட்டி நாளை (06) காலை 10.00 மணிக்கு கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க