மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை நாடெங்கும் கொண்டு செல்லும் LPL இன் Pink Match

Lanka Premier League 2026

3
Lanka Premier League 2026

இலங்கையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்கான முதன்மையான கிரிக்கெட் முன்முயற்சியான ‘எல்.பி.எல் பிங்க் மேட்ச்’ (LPL Pink Match) மீண்டும் களமிறங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான இத்தொடர், புற்றுநோய் விழிப்புணர்வு, நம்பிக்கை மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு தேசிய தளமாக மாற்றப்பட்டுள்ளது.

உலகளவில், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் விளையாட்டுத் துறை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மாறியுள்ளது. அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ‘பிங்க் டெஸ்ட்’ (Pink Test) மற்றும் பாகிஸ்தானின் ‘பிங்க் டே’ (Pink Day ஆகிய போட்டிகள், ஒரு முக்கிய நோக்கத்திற்காக கிரிக்கெட் எவ்வாறு ஒரு தேசத்தையே ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன. இன்று, இலங்கை அந்தப் புரட்சிகரமான பயணத்தை ‘எல்பிஎல் பிங்க் மேட்ச்’ மூலம் தொடர்கிறது.

இதன் செய்தி மிகவும் எளிமையானது:

TLC

தொடுதல் (Touch) • பார்த்தல் (Look) • பரிசோதித்தல் (Check)

மூன்று எளிய வார்த்தைகள்.

மூன்று எளிய செயல்கள்.

ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு உன்னத செய்தி!

தொடுதல்: உங்கள் மார்பகங்களின் இயல்புநிலையை நன்கு அறிந்துகொள்ளுங்கள். ஏதேனும் தடிப்பு, வீக்கம் அல்லது வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தென்படுகிறதா எனத் தொட்டுப் பாருங்கள்.

பார்த்தல்: மார்பகத்தின் வடிவம், அளவு, தோல் அல்லது காம்புகளின் தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்று பாருங்கள்.

பரிசோதித்தல்: வழக்கத்திற்கு மாறான ஏதேனும் மாற்றத்தை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரை அணுகி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், அந்தச் சில நிமிடங்கள் உங்கள் உயிரையோ அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவரின் உயிரையோ காப்பாற்றக்கூடும்!

இலங்கையில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு தோராயமாக 15 பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்படுவதுடன், மூன்று பெண்கள் இதனால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், மார்பகப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த ‘பிங்க் மேட்ச்’ போட்டியானது, ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று எளிய வழிமுறைகளை நினைவில் கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு தந்தை, கணவன், மகன், சகோதரன் மற்றும் நண்பனும் தங்கள் வாழ்வில் உள்ள பெண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்பக்கட்ட மருத்துவ ஆலோசனையைப் பெற ஆதரவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ‘தம்புள்ள சிக்ஸர்ஸ்’ அணி இந்த தேசிய விழிப்புணர்வு முன்முயற்சிக்குத் தலைமை தாங்கி, சமூக மாற்றத்திற்கான ஒரு தளமாக கிரிக்கெட்டைப் பயன்படுத்துவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போட்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் உன்னத வெளிப்பாடாக, ஆட்டம் தொடங்குவதற்கு முன் நடைபெறும் உத்தியோகபூர்வ ‘பிங்க் மேட்ச்’ நிகழ்வில் ‘ஜப்னா கிங்ஸ்’ அணியும் இணைந்துகொள்ளவுள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வு என்று வரும்போது, எதிரணிகள் என்று யாரும் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.

இப்போட்டியின் போது, எஸ்எஸ்சி மைதானம் முழுவதும் இளஞ்சிவப்பு (Pink) நிறமாக காட்சியளிக்கும்

தம்புள்ளை சிக்ஸர்ஸ் வீரர்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற ஆடைகள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ஹெல்மெட்களை அணிந்து களம் காண்பார்கள். அத்துடன், மைதானத்தின் திரைகளிலும், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் புகழ்பெற்ற ‘TLC’ இலச்சினை முக்கியமாகத் காட்சிப்படுத்தப்படும். போட்டி முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுச் செய்திகள் ஒளிபரப்பப்பட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ஆரம்பக்கட்ட கண்டறிதலின் முக்கியத்துவம் நினைவூட்டப்படும்.

புற்றுநோயானது நோயாளிகளை மட்டுமன்றி, அவர்களது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், ‘சுவ அரண’ (Suwa Arana) மற்றும் ‘SOS சிறுவர் கிராமங்கள்’ (SOS Children’s Villages Sri Lanka) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சிறுவர்கள், போட்டிக்கு முந்தைய உத்தியோகபூர்வ நிகழ்வின் போது வீரர்களுடன் இணைந்துகொள்வார்கள்.

மறுபுறத்தில் மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்கள் உத்தியோகபூர்வ Pink Fan T-Shirts-களை கொள்வனவு செய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் ‘இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின்’ (Indira Cancer Trust) மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டங்கள், கீமோதெரபி நோயாளிகளுக்கான விக் (Wigs) தயாரிப்பு, மார்பக செயற்கை உறுப்புகள் மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவுச் சேவைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், அபேக்ஷா மருத்துவமனை, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி மற்றும் ஏனைய தேசிய தொழில்முறை தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இதனால் பகிரப்படும் ஒவ்வொரு செய்தியும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பிரதிபலிப்பதை உறுதி செய்கிறது.

இது தொடர்பில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்துத்தெரிவிக்கையில், மார்பக புற்றுநோயுடன் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும், அதிலிருந்து மீண்டவர்களுக்காகவும்,அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் குடும்பங்களுக்காகவும் மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனை மூலம் காப்பாற்றப்படக்கூடிய ஒவ்வொரு உயிருக்காகவும் இன்று நாங்கள் இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்து விளையாடுகிறோம்.கிரிக்கெட் எங்களுக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது, விளையாட்டைத் தாண்டிய ஒரு உன்னத நோக்கத்திற்காக இதைப் பயன்படுத்துவதில் பெருமையடைகிறோம்.மைதானத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு ரசிகரும் ‘தொடுதல்,பார்த்தல்,பரிசோதித்தல்என்ற மூன்று எளிய வார்த்தைகளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

இந்த நிலையில், தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியின் ஆலோசகர் ரொஷான் மஹாநாம கருத்துத்தெரிவிக்கையில்,மக்களை ஒன்றிணைக்கும் அசாதாரண சக்தி கிரிக்கெட்டிற்கு உண்டு. ஆரம்பக்கட்ட கண்டறிதல் உயிரைக் காப்பாற்றும் என்பதை ஒவ்வொரு இலங்கையருக்கும் நினைவூட்ட இன்று நாம் அந்தச் சக்தியைப் பயன்படுத்துகிறோம். இன்றைய போட்டி ஒரு பெண்ணையாவது ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனையைப் பெற தூண்டினால் அல்லது ஒரு குடும்பத்திலாவது இதுகுறித்த கலந்துரையாடலைத்தொடங்க வழியமைத்தால், ஸ்கோர்போர்டில் உள்ள எந்தவொரு வெற்றியை விடவும் கிரிக்கெட் மிகச் சிறந்த ஒன்றைச் சாதித்துவிட்டது என்று அர்த்தம்,” எனக் குறிப்பிட்டார்.

இந்த ‘எல்பிஎல் பிங்க் மேட்ச்’ இலங்கையின் மிக முக்கியமான வருடாந்த விளையாட்டு மரபுகளில் ஒன்றாக வளர வேண்டும் என்றும், பிற விளையாட்டு அமைப்புகளும் தங்களின் தளங்களை இதுபோன்ற சமூக நலன்களுக்காகப் பயன்படுத்த இது தூண்டுகோலாக அமைய வேண்டும் என்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி நம்புகிறது.

ஏனெனில் இன்று, கிரிக்கெட் இலங்கையர்களிடம் போட்டியின் முடிவை நினைவில் கொள்ளச் சொல்லவில்லை. மாறாக, மூன்று எளிய வார்த்தைகளை நினைவில் கொள்ளச் சொல்கிறது.

தொடுதல். பார்த்தல். பரிசோதித்தல்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<