நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக் 2016

1539
AFP Rio
@AFP

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடிக்க ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது.

தென்அமெரிக்கக் கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது.

ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே பதக்கப்பட்டியலில் ‘செஞ்சுரி’ அடித்து முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது. 43 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 118 பதக்கத்துடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை அமெரிக்கா எட்டியது.

நீச்சல், தடகளம் போன்றவை அமெரிக்காவின் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு உதவிகரமாக இருந்தது. நீச்சலில் 16 தங்கப் பதக்கம் உட்பட 33 பதக்கமும், தடகளத்தில் 13 தங்கப் பதக்கம் உட்பட 31 பதக்கமும் அமெரிக்கா அள்ளியது. ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிப்பது இது 17-வது முறையாகும்.

இந்த முறை சீனாவைப் பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து 27 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என்று 66 பதக்கத்துடன் 2-வது இடத்தைப் பிடித்தது. 1908-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இங்கிலாந்து முதலிடத்தைப் பெற்றிருந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இங்கிலாந்தின் சிறந்த செயற்பாடாக இது அமைந்துள்ளது. சீனா 26 தங்கம் உள்பட 70 பதக்கத்துடன் 3-வது இடத்தைப் பெற்றது.

இந்தியா சார்பில் 118 வீர, வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பப்பட்டனர். ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். முதல் 11 நாட்களில் சோகமே மிஞ்சிய நிலையில் கடைசியில் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும், பேட்மிண்டன் ‘புயல்‘ பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றினர்.

ஒலிம்பிக் வரலாற்றில் பெண்கள் பிரிவில் குறைந்த வயதில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி.சிந்துவின் காட்டில் இப்போது பரிசுமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா இன்று நடைபெற்றது.

பிரேசில் நாட்டு பாடகர்கள், நடிகர்கள், விளையாட்டு சாதனையாளர்கள் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்ட இந்த நிறைவு விழா ஆடல், பாடல், வீரர்கள் அணி வகுப்பு, வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

அந்தந்த நாட்டு வீரர்கள் தங்களது நாட்டுக் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சென்றனர். இந்தியா சார்பில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சாக்‌ஷி மாலிக் தேசியக் கொடி ஏந்தி சென்றார்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது.

இன்றைய ஒலிம்பிக் நிறைவு விழாவில் அடுத்த ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஜப்பான் நாட்டின் கலாச்சாரத்தை குறிக்கும் கண்கவர் கலை நிகழ்சிகளும், ஒலிம்பிக் பிறந்த கிரீஸ் நாட்டை கௌரவிக்கும் வகையிலான நிகழ்சிகளும் நடைபெற்றன. அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேடையில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்வித்தார்

தொடர்ந்து, ஒலிம்பிக் கொடியை ரியோ டி ஜெனிரோ நகர மேயர் எடூரோ பயஸ் இறக்கி, டோக்கியோ நகர ஆளுநர் யூரிகோ கொய்கோவிடம் ஒப்படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஷ் போட்டிகளை நிறைவு செய்து வைத்தார். இறுதியாக ஒலிம்பிக் ஜோதி முறைப்படி அணைத்து வைக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைக் கடிப்பதன் பின்னணி

ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம்.

தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது.

இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை.

ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் தங்கள் புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும், புகைப்படத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என தற்காலத்தில் இந் நடைமுறையை பின்பற்றினாலும், இதற்கு ஒரு உண்மை பின்னனி உண்டு.

ஆரம்ப காலத்தில் உண்மையான தங்கப்பதக்கமா? அல்லது கலப்படமிக்க தங்கப்பதக்கமா? என்பதை கண்டறிவதற்காகவே பதக்கங்களைக் கடித்தனர். உண்மையான தங்கப் பதக்கத்தை கடிக்கும்போது பல்லில் ஒருவித உள்ளீர்ப்பு விசை உணர்வு ஏற்படுவதாக உணர்ந்தனர். இந்த உண்மை இன்று மறக்கப்பட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு பயன்படுவதாக அனைவரும் கருதுகின்றனர்.

இதனைப் பின்பற்றியே தற்போது வரை ஒலிம்பிக் சம்பிரதாயமாக வீர, வீராங்கனைகள் பதக்கங்களைக் கடிப்பது போன்று போஸ் கொடுத்து வருகின்றனர்.