அரையிறுதியில் ஆடவுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாண அணிகள்

108

52 ஆவது முறையாக நடைபெறும் சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் கட்டப் (Level II) போட்டிகளின் இரண்டாம் நாளுக்குரிய மோதல்கள் யாவும் சனிக்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் நிறைவுக்கு வந்தன. 

இரண்டாம் நாளில் காலை இடம்பெற்ற முதல் மோதலில் கண்டியிடம் தோல்வியடைந்த மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் பிரிவு கூடைப்பந்து அணி, இரத்தினபுரி அணியை இரண்டாம் நாளுக்குரிய மற்றுமொரு போட்டியில் எதிர்கொண்டது. அதிக போட்டித்தன்மை கொண்ட இந்த மோதலில் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மட்டக்களப்பு அணி, இரத்தினபுரி வீராங்கனைகளை 59-55 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தனர். 

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய கண்டி

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்……..

இரண்டாம் நாளுக்குரிய மற்றுமொரு மோதலில், கண்டி மாவட்ட ஆண்கள் பிரிவு அணி, அனுராதபுர மாவட்ட அணியினை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் கண்டி வீரர்கள் அனுராதபுர அணியினை 64-53 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தோல்வியுறாத அணியாக முன்னேறியது. 

கண்டி – அனுராதபுர ஆண்கள் பிரிவு அணிகள் இடையிலான போட்டி தவிர மற்றுமொரு ஆண்கள் பிரிவு போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும், குருநாகல் அணியும் மோதின. இந்த மோதலில் ஆரம்பம் தொடக்கம் அட்டகாசம் காண்பித்த மட்டக்களப்பு கூடைப்பந்து வீரர்கள் குருநாகல் அணியினை 54-80 என்ற புள்ளிகள் அபாரமாக வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

>>Photos: 52nd Senior National Level II – Basketball Championship – Day 02 – Evening Session<<

அதேநேரம், சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் நாளுக்குரிய இறுதிப் போட்டியில் காலி மாவட்ட ஆண்கள் பிரிவு அணியும், இலங்கை பல்கலைக்கழக இணைப்பு ஆண்கள் அணியும் மோதின. இப்போட்டியில், காலி மாவட்ட வீரர்கள் 62-55 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை பல்கலைக்கழக இணைப்பு அணியை தோற்கடித்திருந்தனர். 

தொடரின் இரண்டாம் நாளுடன், சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் குழுநிலைப் போட்டிகள் யாவும் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இனி தொடரின் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளது. இதில் அரையிறுதிப் போட்டிகள் மியானி கூடைப்பந்து அரங்கிலும், இறுதிப் போட்டிகள் ஹேர்பட் அரங்கிலும் இடம்பெறவிருக்கின்றன.

சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

52 ஆவது சிரேஷ்ட அணிகளுக்கான தேசிய கூடைப்பந்து……..

அரையிறுதிப் போட்டிகள் விபரம்

ஆண்கள் பிரிவு 

  • கண்டி எதிர் யாழ்ப்பாணம் 
  • மட்டக்களப்பு எதிர் அனுராதபுரம் 

பெண்கள் பிரிவு

  • கண்டி எதிர் பொலன்னறுவை 
  • இலங்கை பல்கலைக்கழக இணைப்பு அணி எதிர் மட்டக்களப்பு 

சிரேஷ்ட அணிகளுக்கான கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<