5 ஆயிரம் மீட்டரில் தேசிய சம்பியனாக மகுடம் சூடினார் வக்ஷான்

100th National Athletics Championship

179
Vakshan

100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷான் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோன்று, ஆண்களுக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டிக்கு மொஹமட் சபானும், ஆண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டிக்கு சி. அரவிந்தனும் தகுதிபெற்றனர்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று (08) காலை தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரின் முதல் நாளான இன்றைய தினம் 10 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறவிருந்தன. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான போட்டிகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

அத்துடன், இன்று நடைபெறவிருந்த ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான கோலூன்றிப் பாய்தல் போட்டியின் இறுதிப்போட்டியை நாளை (09) காலை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

அதேபோன்று, ஆண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பெண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் நாளைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் நிலந்தி லங்கா, பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயந்திகா அபேரட்ன, பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் நிசன்சலா ரத்னசிறி, ஆண்களுக்கான குண்டு எறிதலில் சமித் மதுஷங்க ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

வக்ஷானுக்கு முதல் தங்கம்

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவு செய்ய 14 நிமிடங்கள் 34.26 செக்கன்களை அவர் எடுத்தார்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அவரது முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் அண்மைக் காலமாக பிரகாசித்து வருகின்ற மலையக வீரரான விக்னராஜ் வக்ஷான், கடந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற தேசிய தகுதிகாண் மெய்வல்லுனர் தொடரின் முதலாவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

தலவாக்கலையச் சேர்ந்த வக்ஷான், கடந்த 2019 முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றார். இதில் 2019 இல் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், இறுதியாக 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 6ஆவது இடத்தையும், 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களான டி.எஸ் திஸாநாயக்க மற்றும் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார ஆகிய இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இறுதிப்போட்டியில் சபான், அரவிந்தன்

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் தகுதிச்சுற்றில் பங்குகொண்ட இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான், 21.5 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இதனைனத்தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற அரை இறுதிப்போட்டியை 21.33 செக்கன்களில் ஓடி முடித்த அவர், இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மலையக வீரரான சி. அரவிந்தன், மாலை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.

நாளை (08) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<