இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்கிறார் ரவி ஷாஸ்திரி

175

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ரவி ஷாஸ்திரி தக்கவைத்துக்கொண்டுள்ளார். எனவே, 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டி வரை அவர் அணியின் பயிற்சியாளராக தொடரவுள்ளார்.  

இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்வது குறித்த செயல்முறைகள் இன்று (16) மாலை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இந்திய பயிற்றுவிப்பாளருக்காக போட்டியிடும் ஆறு பேரின் விபரம் வெளியானது!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை….

இந்திய பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் 57 வயதான ரவி ஷாஸ்திரியும் இடம்பெற்றிருந்தார். தற்போதைய இந்திய பயிற்சியாளர் என்பதால் பயிற்சியாளர் தேர்வுக்கு அவர் நேரடியாக தகுதி பெற்றிருந்தார். 

இந்நிலையில் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏனைய விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு முகம்கொடுத்தனர். இவர்களில் லாசண்ட் ராஜ்புட் (2007 உலகக் கிண்ண டி20இல் இந்திய அணி முகாமையாளர்), ரொபின் சிங் (இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்), டொம் மூடி (2007 உலகக் கிண்ணத்தின் இலங்கை அணியின் பயிற்சியாளர்), மைக் ஹேசன் (2015 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்) மற்றும் பில் சிம்மன்ஸ் (2016 டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர்) உள்ளடங்குகின்றனர்.  

இந்த தேர்வு முறையில் கவர்ச்சிகரமான விளக்கக்காட்சிகள் அடிப்படையில் மைக் ஹேசன் மற்றும் டொம் மூடி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்ததாக கிரிக்கெட் ஆலோசனை குழு குறிப்பிட்டது.  

இந்த தேர்வு முறையில் பயிற்சி உளவியல், பயிற்சி அனுபவம், பயிற்சி அடைவுகள், தொடர்பாடல், நவீன பயிற்சி கருவிகளின் புலமை ஆகியவையில் விண்ணப்பதாரிகள் புள்ளிகளை பெற வேண்டி ஏற்பட்டது.

கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்….

இன்று காலை கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மூலம் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது. ராஜ்புட், ஹேசன் மற்றும் சிங் ஆகியோர மும்பையில் நேர்முகப் பரீட்சைக்கு தோன்றி தமது விளக்கக் காட்சிகளையும் சமர்ப்பித்தனர். 

“3ஆம் இடம் டொம் மூடி, 2ஆம் இடம் மைக் ஹேசன், முதலிடம் ரவி ஷாஸ்திரி, நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி ரவி ஷாஸ்திரி மீண்டும் நியமிக்கப்படுகிறார். ஆனால் இது மிகவும் நெருக்கமான போட்டி” என்றார் கபில்தேவ்.

நேர்காணல் கண்ட அனைத்து பயிற்சியாளர்களை விடவும் ஷாஸ்திரியின் சாதனை ஒப்பிடப்பட முடியாதது என்று கருதியது கிரிக்கெட் ஆலோசனை குழு. இந்திய அணி முதல் இடத்தை டெஸ்ட்டில் பிடித்தது, அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக 71 ஆண்டு வரலாற்றில் இந்திய அணி கோஹ்லி தலைமையில் தொடரை வென்றது. இந்தியா மட்டுமல்ல ஆசியாவுக்கே இது சாதனையாக அமைந்தது. 

ஆனால் 2015, 2019 உலகக் கிண்ணங்களில் அரையிறுதி வரை வந்து இந்தியா தோல்வியடைந்ததும் ஷாஸ்திரி பயிற்சியின் கீழ்தான். ஆனால், இது கிரிக்கெட் குழுவின் முடிவைப் பாதிக்கவில்லை.

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியுடன் நெருக்கமான உறவு காரணமாக ரவி ஷாஸ்திரி தொடர்ந்து இந்திய அணி பயிற்சியாளராக நீடிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. கோஹ்லி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் ஷாஸ்திரிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை வெளியிட்டிருந்தார்.  

இளம் லசித்தின் சுழலை தாண்டியும் வலுவடைந்த நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…

ஷாஸ்திரி முன்னதாக 2014–16 ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டபோதும் அணில் கும்ப்ளேவிடம் அந்த பதவியை 2016 இல் இழந்தார். எனினும், கும்ப்ளே – கோஹ்லிக்கு இடையிலான முறுகலை அடுத்து 2017 ஜூலையில் அவர் மீண்டும் இந்திய அணி பயிற்சியாளராக தெரிவானார்.  

ரவி ஷாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 21 போட்டிகளில் 11 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பெற்ற போதும் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட தோல்விகளால் பின்னடைவை சந்தித்தது.     

இந்தக் காலப்பிரிவில் இந்திய அணி 61 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 44 வெற்றிகளை பெற்றது. இதன்போது இந்திய அணி 2019 உலகக் கிண்ண அரையிறுதி வரை முன்னேறியது. அதேபோன்று 36 டி20 போட்டிகளில் 25 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது.  

“கடந்த இரண்டு ஆண்டுகளில் தாம் செய்ததை நாம் மேம்படுத்த வேண்டும் என்றே ஷாஸ்திரி எம்மிடம் குறிப்பிட்டார். தமக்கு தேவையான உதவிகள் பற்றியும் அவர் எம்மிடம் குறிப்பிட்டார்” என்று கபில் தேவ் குறிப்பிட்டார்.