ஜிம்பாப்வே – இங்கிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட்

227

இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி 2025ஆம் ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 22 அண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கடைசியாக 2003ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தது. அதன்பிறகு இரு அணிகளும் இங்கிலாந்தில் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த நிலையில், ஜிம்பாப்வே – இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் கூறும்போது, ”ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் நெருக்கமான உறவில் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரும்புகிறது. இதையடுத்து 2 அணிகளிடையிலான டெஸ்ட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த டெஸ்ட் போட்டி 2025ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை நடத்தும் இடம் இன்னும் முடிவாகவில்லை. இது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரலாறு உள்ளது. ஜிம்பாப்வே அணி உலக தரத்திலான வீரர்களை கொடுத்துள்ளது. ஜிம்பாப்வேவுடன் உறவை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என கூறினார்.

மேலும், இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் கிவ்மோர் மகோனி கூறியதாவது, ”இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் கிடைப்பது எங்கள் தற்போதைய தலைமுறை வீரர்களுக்கு மிகப்பெரியது” என கூறினார். கடைசியாக இங்கிலாந்து அணி கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<