உலகக் கிண்ணத்தில் காலநிலை முக்கிய செல்வாக்கு செலுத்தும் -பீடர்சன்

259
GETTY IMAGES

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகும் ஒருநாள் உலகக் கிண்ணம், காலநிலையில் தங்கியிருக்கும் ஒரு கிரிக்கெட் தொடராக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கெவின் பீடர்சன் தெரிவித்துள்ளார். 

அதன்படி, அடுத்த மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது அதிக உஷ்ணம், உலர்வான காலநிலை நிலவும் எனில் அப்படியான சூழ்நிலைகள் துணைக்கண்ட நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு சாதகமாக அமையும் என கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டிருக்கின்றார்.

உலகக் கிண்ண எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் அகில தனஞ்சய

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மாகாண மட்ட ‘சுப்பர் 4 ….

“ இது (உலகக் கிண்ணத் தொடர்) காலநிலையில் தங்கியிருக்கவுள்ளது. “ என கெவின் பீடர்சன் மும்பையில் உலகக் கிண்ணத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.  

“1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த ஆண்டிலேயே இங்கிலாந்தில் மிகவும் அழகிய கோடைகாலம் ஒன்று பதிவானது. கடந்த ஆண்டில் மிகவும் குறைவான மழைவீழ்ச்சி கிடைத்ததோடு மிக அதிகமான வெப்பநிலையும், உலர்வான காலநிலையும் காணப்பட்டிருந்தது. எனவே, நிலைமைகள் கடந்த ஆண்டு போன்று இம்முறையும் இருக்கும் எனில், துணைக்கண்ட நாடுகள் உலகக் கிண்ணத்தில் முக்கிய பங்கு ஒன்றினை எடுத்துக் கொள்ளவிருக்கின்றன. “ என கெவின் பீட்டர்சன் மேலும் பேசினார்.

அதேநேரம் பீடர்சன், உஷ்ண நிலைமைகள் எதிர்பார்த்தபடி அமையாது போனால் உலகக் கிண்ண தொடரை நடாத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கே அதிக பலன்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 (உலகக் கிண்ணத்தின் போது) அப்படி நிலைமைகள் இல்லை எனில் அது இங்கிலாந்து அணிக்கான ஒரு சாதக நிலைமையினை ஏற்படுத்திவிடும். 

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வெல்ல எதிர்பார்க்கப்படும் முக்கிய அணியாக இங்கிலாந்து காணப்படுகின்றது. இங்கிலாந்து அணி தாம் விளையாடிய கடைசியாக 43 ஒருநாள் போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்து ஐ.சி.சி.இன் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள 12ஆவது கிரிக்கெட் உலகக்….

மறுமுனையில் துடுப்பாட்ட நட்சத்திரமான விராட் கோலியினால் வழிநடாத்தப்படும் இந்திய அணியும் உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கப்படும் ஏனைய அணியாக காணப்படுகின்றது. அதன்படி, உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இங்கிலாந்து காலநிலையை  கருத்திற் கொண்டு வீரர்கள் தேர்வு இடம்பெறும் என அதன் உபதலைவரான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

“ எங்களை பொறுத்தவரையில் நாம் மிகவும் நல்ல நிலையில் காணப்படுகின்றோம். எமது அணியில் சில வீரர்களின் இடங்கள் ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் “

நாம் மேலதிக வேகப் பந்துவீச்சாளர் ஒருவருடன் செல்வதையோ அல்லது மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ஒருவருடன் செல்வதையோ அல்லது மேலதிக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஒருவருடன் செல்வதையோ அல்லது  சுழல் பந்துவீச்சாளர் ஒருவருடன் செல்வதையோ அணித்தலைவர், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களின் எண்ணப்படியே தீர்மானிக்க வேண்டி இருக்கும் 

“(வீரர்கள் தெரிவிற்கு) இங்கிலாந்தின் சூழ்நிலைகளே முக்கிய காரணமாக அமையும். கடைசியாக நாம் அங்கே சென்ற போது உலர்வான நிலைமைகளே இருந்தது. அப்படியான நிலைமைகள் இம்முறை இருக்கும் எனில், எங்களுக்கு ஒரு சுழல் பந்துவீச்சாளர் தேவையாக இருப்பார். அப்படியான நிலைமைகள் இல்லை எனில் நாம் மேலதிக வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை எடுக்க வேண்டி வரும். “

இதன் அடிப்படையில் உலகக் கிண்ணத்திற்கான இந்திய வீரர்கள் குழாம் எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணிகள் தமது வீரர்கள் குழாம்களை  அறிவிக்க வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 23ஆம் திகதி என ஐ.சி.சி. இனால் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவித்தலுக்கு அமைவாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<