நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தீர்மானம் மிக்க விறுவிறுப்பான போட்டியில், இலங்கை அணி மோசமான களத்தடுப்பு காரணமாக மூன்று விக்கெட்டுகளால் தோல்வியை தழுவி, அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டது.

மோசமான களத்தடுப்பினால் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின், அரையிறுதிப்போட்டிகளில்..

இதன் காரணமாக அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முதலில், அணியின் களத் தடுப்பே தோல்விக்குக் காரணம் எனத் தெரிவித்த மெதிவ்ஸ், இந்தப் போட்டியில் எமது களத் தடுப்பு மீண்டுமொரு முறை மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தது. கிடைக்கப்பெற்ற பிடிகளை எடுத்திருந்தால் போட்டியின் தன்மை வேறு விதமாக இருந்திருக்கும். சர்வதேச மட்டத்திலுள்ள அணியாக நாம் முக்கிய தருணங்களில் களத் தடுப்பில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். களத் தடுப்பில் எமது அணி முன்னேற்றம் கண்டிருந்த போதிலும், இந்தப் போட்டியில்  எம்மால் சிறப்பாக செயல்பட முடியவில்லை” என்றார்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்கள் அனைவரும் சிறந்த முறையில் செயற்பட்டமையினால் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில், பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் அணியின் தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பும் காரணமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மெதிவ்ஸ்,

”அணி தோல்வியுறும் போது, மோசமான துடுப்பாட்டம் அல்லது மோசமான களத் தடுப்பு என்றெல்லாம் காரணம் கூற முடியும். எனினும், இந்தப் போட்டியில் எமக்கு கிடைத்த ஆடுகளம் சற்று வேறுபட்டதாக இருந்தது. உண்மையில், நாம் இந்தப் போட்டியில் எதிர்பார்த்த ஓட்டங்களை விட 30, 40 ஓட்டங்களை குறைவாகவே பெற்றுக்கொண்டோம். ஓட்டங்கள் குறைவாக இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியை சவாலுக்குட்படுத்தும் வகையில் எமது வீரர்கள் செயல்பட்டிருந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். துரதிஷ்டவசமாக எமது களத் தடுப்பு எம்மை ஏமாற்றி விட்டது” என்றார்.

Photos: Sri Lanka v Pakistan | ICC Champions Trophy 2017 – Match 12

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியின் புகைப்படங்கள்..

அதனைத் தொடர்ந்து, லசித் மாலிங்க தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவாரா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மெதிவ்ஸ், அது குறித்து லசித் மாலிங்க இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், எமது அணிக்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகின்றார். அவர் ஒரு வியக்கத்தக்க பந்து வீச்சாளர். இந்த போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு அருமையாக பந்து வீசினார், அவர் உருவாக்கிக் கொடுத்த பிடியெடுப்புக்களை வீணடித்துவிட்டோம். இக்கட்டான சூழ்நிலையில், முழு பங்களிப்பையும் வழங்கியிருந்தார்.

எங்கள் அணியில் நிறைய சகலதுறை ஆட்டக்காரர்கள் இருந்தாலும் இந்த வகையான ஆடுகளங்களில் நிபுணத்துவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியும். அந்த  வகையில், எதிர்வரும் போட்டிகளில் அந்தந்த ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு நிபுணத்துவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை  தெரிவுக்குழுவுடன் கலந்தாலோசித்து தெரிவுசெய்யவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இந்திய அணியுடனான போட்டிகளில் அசேல குணரத்ன சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் குறைந்தளவு ஓவர்களே அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.  இதற்குக் காரணம் தெரிவித்த அவர், அணித் தலைவர் என்ற ரீதியில், போட்டியின் தன்மைக்கேற்றவாறும் துடுப்பாட்ட வீரர்கள் என்ன செய்யவிருக்கின்றார்கள் மற்றும் யார் நன்றாக பந்து வீசுகின்றார்கள் போன்ற விடயங்களை கவனித்தே பந்து வீச்சாளரைத் தீர்மானிக்கின்றேன். ஏனெனில் போட்டியின் எல்லாவிதமான முடிவுகளுக்கும் நானே பதிலளிக்க வேண்டும் என்றார்.

இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்

யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள்..

மேலும், தற்பொழுது இடம்பெறும் போட்டிகளை வைத்து இங்கிலாந்தில் 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு அணியின் மாற்றங்களை குறிப்பிட மடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  

இலங்கை அணியைப் பொருத்தவரை, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் எதிரணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தே வந்தது. பாகிஸ்தான் அணியுடனான போட்டியைப் போன்றே, முதல் போட்டியிலும் தென்னாபிரிக்க அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்ததன் பின்னரே தோல்வியைத் தழுவியது. இதனையும் மெதிவ்ஸ் நினைவு கூறினார்.

தற்பொழுது சம்பியன்ஸ் கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ள இலங்கை அணி, அடுத்து சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெறவுள்ள ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.