45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்துவருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அமெரிக்கா, ஈக்வேடார், பேரு, கொலம்பியா, ஆர்ஜென்டினா, வெனிசிலா, மெக்சிகோ, சிலி ஆகிய அணிகள் கால் இறுதிக்குத் தகுதிபெற்றன.

பிரேசில், உருகுவே, கோஸ்டாரிகா, பராகுவே, ஹைதி, ஜமைக்கா, பனாமா, பொலிவியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதிப் போட்டியில் அமெரிக்கா-ஈக்வேடார் அணிகள் மோதின.

உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களம் இறங்கிய அமெரிக்க அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 22ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டெம்சே கோல் அடித்தார்.

முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி ஆட்டத்திலும் அமெரிக்காவின் ஆக்ரோஷம் தொடர்ந்தது. 65ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் சார்ட்ஸ் 2ஆவது கோலை அடித்தார்.

இதனால் பதில் கோல் அடிக்க ஈக்வேடார் அணி முயற்சித்தது. 74ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்யோ கோல் அடித்தார். அதன்பின் ஈக்வேடார் அணி 2ஆவது கோலை அடிக்கவிடாமல் அமெரிக்க வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு நுழைந்தது.

அரை இறுதியில் ஆர்ஜெண்டினா அல்லது வெனிசூலா ஆகிய 2 அணிகளில் ஒன்றை அமெரிக்கா சந்திக்கும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்