சலன பிரமன்தவின் கடைசி நேர கோலினால் புனித ஜோசப் இறுதிப் போட்டியில்

322

சலன பிரமன்த கடைசி நேரத்தில் போட்ட அபார கோல் மூலம் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு எதிரான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் புனித ஜோசப் கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின்மூலம் அந்த அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் (16) தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடைசி நிமிட கோல் மூலம் அரையிறுதிக்கு நுழைந்த புனித ஜோசப் கல்லூரி

ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய புனித ஜோசப் கல்லூரி புனித பேதுரு கல்லூரிக்கு …

சுகததாஸ அரங் கில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற பரபரப்பான முதலாவது அரையிறுதியின் முதல் பாதியில் இரு அணிகளும் பெனால்டி வாய்ப்புகள் மூலம் கோல்கள் பெற்ற நிலையில் சலன பிரமன்ன கடைசி நேரத்தில் கோலுக்கு தொலைவில் இருந்து உதைந்த பந்து புனித ஜோசப் கல்லூரிக்கு வெற்றி கோலாக மாறியது.  

புனித ஜோசப் கல்லூரி காலிறுதியில் புனித பேதுரு கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதோடு நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரியை தோற்கடித்தது.    

போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே வேகமாக பந்தை கடத்திச் சென்ற மாரஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்கள் புனித ஜோசப் கோல் கம்பத்தை ஆக்கிரமித்தனர். எனினும், புனித ஜோசப் பின்கள வீரர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரரை பெனால்டி எல்லைக்குள் வைத்து முறையற்ற விதத்தில் கீழே வீழ்த்தியதால் மாரிஸ் ஸ்டெல்லாவுக்கு பெனால்டி கிக்வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணித்தலைவர் தரிந்து டி சில்வா பெனால்டி கிக்கை உதைத்தபோது புனித ஜோசப் கோல்காப்பாளர் மார்ஷல் கொடிக்கார அந்தப் பந்தை அபாரமாக தடுத்தார். அவரது கையில் பட்டு வந்த பந்தை கோல் கம்பத்திற்கு வெளியால் உதைக்க முயன்ற புனித ஜோசப் வீரர் சயூரு பிம்சர, பந்தை தவறுதலாக வலைக்குள் செலுத்தி ஓன் கோல் மூலம் எதிரணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்மூலம் போட்டியின் ஆரம்பத்திலேயே மாரிஸ் ஸ்டெல்லா முன்னிலை பெற்றபோதும் புனித ஜோசப் வீரர்கள் பதில் கோல் திருப்ப போராடினர். போட்டியில் வேகத்தை அதிகரித்த புனித ஜோசப் வீரர்கள் எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையின் போட்டியின் 14 ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் வீரர் செனால் சந்தேஷ் மாரிஸ் ஸ்டெல்லா கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றபோது எதிரணி பின்கள வீரரால் கீழே வீழ்த்தப்பட்டார். இதனால் புனித ஜோசப் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு தினேஷ் குரே மாரிஸ் ஸ்டெல்லா கோல் காப்பாளர் பிரகாஷ் பெரேராவை முறியடித்து பதில் கோல் போட்டார்.

இந்த கோலை ஆடுத்து 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்த புனித ஜோசப் கல்லூரி ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியபோதும் கடந்த போட்டிகள் போன்ற வேகம் அந்த அணியிடம் தெரியவில்லை. பந்து அதிக நேரம் மத்திய களத்திலேயே சுழன்றது.

மகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்

யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி அணிக்கு எதிரான போட்டியை 2-0 என்ற கோல்கள் …

முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லா முன்கள வீரர் தரிந்து சில்வா கோல் பெறும் இரண்டு முயற்சிகளை தவறவிட்டார்.

எனவே முதல் பாதி ஆட்டம் ஆரம்ப நிமிடங்களில் பெறப்பட்ட கோல்களுடன் சமநிலையில் முடிவுற்றது.

முதல் பாதிமாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 1 புனித ஜோசப் கல்லூரி

வெற்றி கோலை பெறும் முயற்சியோடு இரு அணிகளும் இரண்டாவது பாதியை ஆக்கிரமிப்பு ஆட்டத்துடனேயே ஆரம்பித்தன. எனினும், புனித ஜோசப் கல்லூரியின் கால்களிலேயே பந்து அதிக நேரம் இருப்பதை காண முடிந்தது.

ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் செனால் சன்தேஷ் அதிரடியாக கடத்தி வந்த பந்தை மாரிஸ் ஸ்டெல்லா வீரர் மொஹமட் சாஜித் கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து அபாரமாக தடுத்தார்.

போட்டியின் 65 மற்றும் 70ஆவது நிமிடங்களிலும் புனித ஜோசப் வீரர்கள் கோல் வாய்ப்பை நெருங்கி வந்தபோதும் அவற்றை அவர்களால் வலைக்குள் செலுத்த முடியவில்லை.

எவ்வாறாயினும் இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பித்தில் இரு அணிகளுக்கும் தெளிவான கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஆட்டம் இழுபறியுடனேயே நீடித்தது. குறிப்பாக மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் தமக்கு கிடைக்கும் கோணர் கிக் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை.

Photos : St. Peter’s College v St. Joseph’s College – Quarter Final | ThePapare Football Championship 2018

ThePapare.com | Brian Dharmasena | 24/11/2018 Editing and re-using images without …

80ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் கல்லூரிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் சமத் ரஷ்மிக்க உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பளர் பிரகாஷ் பெரேரா தடுத்தார். அப்போது தடுப்பில் பட்டு வந்த பந்தை செனால் சந்தேஷ் தலையால் முட்டினார் அந்தப் பந்து பட்டும் படாமலும் கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.

போட்டி இறுதி நேரத்தை நெருங்கிய நிலையில் புனித ஜோசப் அணிக்காக சலன பிரமன்த எதிர்பாராத கோல் ஒன்றை பெற்றார். 88ஆவது நிமிடத்தில் வைத்து எதிரணியின் மத்திய களத்தில் இருந்து பந்தை உயர்த்தி அடித்து சலன வலைக்குள் செலுத்தினார்.

எனினும், கோல் புகுத்தப்பட்டு அடுத்த நிமிடத்திலேயே மாரிஸ் ஸ்டெல்லா முன்கள வீரர்கள் கோல் பெறும் முயற்சியை புனித ஜோசப் கோல் காப்பாளர் மார்ஷல் தடுத்தார்.  

எவ்வாறாயினும், புனித ஜோசப் அணியின் வெற்றியை கடைசி இரண்டு நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லா அணியால் தடுக்க முடியவில்லை.

எனவே, விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் நடந்த இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரி ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதல் அணியாக தம்மைப் பதிவு செய்தது.

முழு நேரம்மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 2 புனித ஜோசப் கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சலன பிரமன்த (புனித ஜோசப் கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – சயூர பிம்சர 2′ (ஓன் கோல்)

புனித ஜோசப் கல்லூரி – தினேஷ் குரே 14′, சலன பிரமன்த 88′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<