அன்டிகுவாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மந்த கதியில் ஓவர்கள் வீசியமைக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் வழங்கப்பட்டுள்ளதோடு, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) புள்ளிகளில் இரண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
>>கெண்டி றோயல்ஸ் அணியின் இணை உரிமையாளராக Optimum Health Care கைகோர்ப்பு<<
மேற்கிந்திய தீவுகள் அணியானது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் இரு ஓவர்கள் குறைவாக வீசியிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, போட்டி மத்தியஸ்தர் ஜவஹால் ஸ்ரீநாத் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான தண்டனைகளை தீர்மானித்திருக்கின்றார்.
ஐ.சி.சி இன் ஒழுங்கு விதிகளின் படி, ஒரு அணி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் இருந்து ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும், மேலும் இந்த அபராதத்தின் அதிகபட்ச வரம்பு 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் விதிமுறைகளின்படி, குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் குறிப்பிட்ட அணியின் புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளி வீதம் குறைக்கப்படும்.
இலங்கை அணியுடனான தொடரினை 1-0 எனக் கைப்பற்றியிருக்கும் மேற்கிந்திய தீவுகள் தற்போது புள்ளிகள் குறைக்கப்பட்டதனை அடுத்து, 10 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 சமநிலை மற்றும் 7 தோல்விகளுடன் மொத்தமாக 18 புள்ளிகள் பெற்றுள்ளது. அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணியானது ஐ.சி.சி. இன் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















