நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்கவும் முதல் சுற்றுடன் வெளியேறினார்

Tokyo Olympics - 2020

200

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் நான்காவது நாளான இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியின் தகுதிச்சுற்றில் பங்குகொண்ட இலங்கை வீரர் மெதிவ் அபேசிங்க 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் பங்குகொண்ட 9 பேரில் 6ஆவது வீரராக மெதிவ் அபேசிங்க ஏமாற்றத்துடன் வெளியேறினார்

தோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன

டோக்கியோ நீர்நிலை நீச்சல் தடாகத்தில் இன்று (27) பிற்பகல் ஆண்களுக்கான 100 மீட்டர் சாதாரண நீச்சலுக்கான 9 தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்காவது தகுதிச்சுற்றில் இலங்கை வீரர் மெதிவ் அபேசிங்க போட்டியிட்டார்.

எட்டு வீரர்கள் பங்குபற்றிய இப் போட்டியின் முதல் 50 மீட்டர் தூரத்தை 23.47 செக்கன்களில் முதலாவது வீரராக நிறைவுசெய்த மெதிவ், கடைசி 30 மீட்டரில் துரதிஷ்டவசமாகப் பின்னடைவை சந்தித்தார்.

இதன்படி, போட்டியை 50.62 செக்கன்களில் நிறைவு செய்த மெதிவ் அபேசிங்க எட்டாவது இடத்தைப் பெற்றார்

இதன்படி, 71 வீரர்கள் பங்குபற்றிய 9 தகுதிகாண் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் 48ஆவது இடத்தை மெதிவ் அபேசிங்க பெற்றார்.

அமெரிக்காவில் நீண்டகாலமாக பயிற்சி பெற்று வருகின்ற மெதிவ் அபேசிங்க, இதுவரை ஒன்பது தேசிய நீச்சல் சாதனைகளை முறிடித்துள்ளார்.

Photos: Day 4 – 2020 Tokyo Olympic Games

2016இல் அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்காக ஏழு தங்கப் பதக்கங்களை வென்றுகொடுத்த அவர், 2019 நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 7 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்

2016 ரியோ ஒலிம்பிக், பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா என பல சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மெதிவ் அபேசிங்க, உலக நீச்சல் சம்பியன்ஷிப்பிற்கு நேரத்தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<