பந்து வீச்சில் பிரகாசித்த ரமித் ரம்புக்வெல்ல, ஜீவன் மெண்டிஸ்: தமிழ் யூனியன் கழகத்திற்கு வெற்றி

684
Tier A Roundup

இலங்கை பிரிமியர் லீக் தொடரில், இன்று நடைபெற்று முடிந்த ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்றில், வெற்றி இலக்கினை எட்டுகின்ற வரையில் பதுரேலிய விளையாட்டு கழக அணி போராடிய போதும் துரதிஷ்டவசமாக, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திடம், மேலதிக 38 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதனால், இப்போட்டியினை இந்தளவு வரை கொண்டு வந்த நிமந்த மதுசங்க இன் சதமும் வீணானது.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டு கழகம்

P சரவணமுத்து மைதானத்தில் திங்கட்கிழமை(19) ஆரம்பமாகிய மூன்று நாட்கள் கொண்ட இப்போட்டியில், நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 7 விக்கெட்டுகளை இழந்தது 222 ஓட்டங்களை பெற்று பதுரெலிய கழகத்தினை விட 345 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்து இன்று தனது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்தது.

இன்றைய நாள் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டு விக்கெட்டுகளை இழந்த காரணத்தினால், 58.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்சினை முடித்துக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், தமிழ் யூனியன் அணி சார்பாக, சித்தார கிம்ஹான் 86 ஓட்டங்களையும், தினுக் விக்ரமநாயக்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் தனது முழுத்திறமையினையும் வெளிப்படுத்திய பதுரெலிய அணியின் தலைவரும் வலது கை சுழற்பந்து வீச்சாளருமாகிய அலங்கார அசங்க சில்வா, இன்று கைப்பற்றிய விக்கெட்டுடன் சேர்த்து மொத்தமாக பதுரேலிய அணிக்காக 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தோடு, அவ்வணிக்காக நிமந்த மதுசங்கவும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 363 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை பெறுவதற்கு தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டு கழக அணி, தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரரை முதல் பந்திலேயே இழந்தது. பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, 5ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய நிமந்த மதுசங்க மற்றும் அலங்கார அசங்க சில்வா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் வெற்றியிலக்கினை அடைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இருப்பினும் சாமிக கருணாரத்ன மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரின் பந்து வீச்சினால் இருவரும் ஆட்டமிழக்க செய்யப்பட்டனர். இதனால், வெற்றி இலக்கினை நெருங்கி வந்த பதுரெலிய கழகத்தின் பயணம் 84.3 ஓவர்களில் 324 ஓட்டங்களுடன் முற்றுப்பெற்றது. இதனால், மேலதிக 38 ஓட்டங்களால் பதுரெலிய அணி தமிழ் யூனியன் அணியிடம் தோல்வியுற்றது.

ஒரு விறுவிறுப்பான போட்டியொன்றாக அமைந்த இந்த ஆட்டத்திற்கு, நிமந்த மதுசங்க 126 ஓட்டங்களை பதுரெலிய அணிக்காக பெற்றுத்தந்ததுடன், அலங்கார அசங்க சில்வா 69 ஓட்டங்களை பெற்றுத்தந்தார்.

பந்து வீச்சில், தமிழ் யூனியன் சார்பாக ரமித் றம்புக்வெல்ல, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 252 (63.3) – சரித் ஜயம்பதி 50, சாமிக கருணாரத்ன 48, புலின தரங்க 39, சாலிய சமன் 51/4, அலங்கார அசங்க சில்வா 70/3

பதுரேலிய விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 129 (52.5) – நதீர நாவல 60, ரமித் ரம்புக்வெல 47/5, ஜீவன் மெண்டிஸ் 49/4

தமிழ்யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 239/9 (58.3) – சித்தார கிம்ஹான் 86, தினுக் விக்ரமநாயக்க 48, அலங்கார அசங்க சில்வா  87/7

பதுரெலிய விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 324 (84.3) –நிமந்த மதுசங்க 126, அலங்கார அசங்க சில்வா 69, ஜீவன் மெண்டிஸ் 90/4, ரமித் ரம்புக்வெல 130/4

போட்டி முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 38 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

இன்று கட்டுநாயக்கவில், ஆரம்பமாகிய ‘A’ மட்டத்திற்கான மற்றுமொரு போட்டியொன்றில், சிலாபம் மேரியன்ஸ் அணியும் காலி கிரிக்கெட் கழகமும் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மஹேல உடவத்த முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். இதன்படி, களமிறங்கிய அவ்வணி, ஷெஹான் ஜயசூரிய மற்றும் சச்சித்ர சேரசிங்க ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன், இன்றைய ஆட்ட நிறைவின் போது 84 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

இவ்வாறான பாரிய மொத்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற அவ்வணியினை வழிவகுத்த ஷெஹான் ஜயசூரிய 168 ஓட்டங்களை பெற்றதுடன், மற்றைய வீரரான சச்சித்ர சேரசிங்க 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளார்.

பந்து வீச்சில், இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை, நிப்புன மதுசங்க இரண்டு விக்கெட்டுகளை காலி கிரிக்கெட் கழகம் சார்பாக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்): 397/5(84) – ஷெஹான் ஜயசூரிய 168, சச்சித்ர சேரசிங்க 101*, மஹேல உடவத்த 53, நிப்புனள மதுசங்க 55/2

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


சோனகர் கழகம் எதிர் BRC கழகம்

இன்று ஆரம்பமாகிய, ‘A’ மட்டத்திற்கான இன்னுமொரு போட்டியில், சோனகர் கழகமும் BRC கழகமும் மோதிக்கொண்டன. இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற BRC கழக அணித்தலைவர் ஹர்ஷ விதான முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து லசித் லக்ஷான், சாணக்க விஜயசிங்க, ஹஷேன் ராமநாயக்க ஆகியோரின் அரைச்சத உதவியுடன் தங்களது முதல் இன்னிங்சிற்காக 293 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அரைச்சதம் கடந்த வீரர்களான, லக்ஷான், விஜயசிங்க, ராமநாயக்க ஆகியோர் முறையே 63,52,53 ஓட்டங்களை BRC கழகத்திற்காக  பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், சோனகர் கழகம் சார்பாக திலான் துஷார, நிலங்க சந்தகன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த சோனகர் கழகம் இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை, விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 47 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

BRC அணி (முதல் இன்னிங்ஸ்): 293 (76.4) – லசித் லக்ஷான் 63, ஹஷேன் ராமநாயக்க 53, சானக்க விஜயசிங்க 52, தேவிந்த் பத்மநாதன் 35, திலான் துஷார 54/3, நிலங்க சந்தகன் 80/3, சஜித்ர பெரேரா 75/2

சோனகர் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 47/0 (11) – ருவிந்து குணசேகர 34*, பிரிமோஷ் பெரேரா 13*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


செரசன்ஸ் கழகம் எதிர் கோல்ட்ஸ் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமாகிய, இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செரசன்ஸ் அணித்தலைவர் ஹர்ஷ கூரே,  கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு நிர்ப்பந்தித்தார்.

இதன்படி, களமிறங்கிய கோல்ட்ஸ் அணி  ஒரு நல்ல ஆரம்பத்துடனும், எஞ்சலோ ஜயசிங்கவின் சதத்தின் உதவியுடனும் இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, 90 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து  321 ஓட்டங்களினை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில், எஞ்சலோ ஜயசிங்க 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்ததோடு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சதீர சமரவிக்ரம 56 ஓட்டங்களை கோல்ட்ஸ் அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், செரசன்ஸ் கழகம் சார்பாக சத்துர ரந்துனு 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இன்றைய ஆட்ட நேர முடிவு வரை கைப்பற்றி தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்): 321/8 (90) – எஞ்சலோ ஜயசிங்க 103*, சதீர சமரவிக்ரம 56, பிரபாத் ஜயசூரிய 40*, அகில தனன்ஜய 31, சத்துர ரந்துனு 78/5

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


சிங்ககள விளையாட்டு கழகம்(SSC) எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

இத்தொடரின் மற்றுமொரு போட்டியில், சிங்கள கிரிக்கெட் கழகமும் ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் கழகமும் மோதிக்கொண்டன.

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ப்ளும் பீல்ட் கிரிக்கெட் கழக அணி, சிங்கள கிரிக்கெட் கழக அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி, மினோத் பானுக, தனுஷ்க குணத்திலக, சச்சித்ர சேனநாயக்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் துணையுடன், இன்றைய ஆட்ட நேர முடிவு வரை 8 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக, துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மினோத் பாணுக 97 ஓட்டங்களையும், தனுஷ்க குணத்திலக்க 94 ஓட்டங்களை பெற்று சதம் பெற தவறினர். இவர்களுடன் சச்சித்ர சேனநாயக்க ஆட்டமிழக்காமல் 50  ஓட்டங்களையும் அவ்வணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், ப்ளும் பீல்ட கழக அணி சார்பாக மலித் டி சில்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிங்கள கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 382/8 (90) – மினோத் பானுக்க 97, தனுஷ்க குணத்திலக்க 94, மலித் டி சில்வா 117/3

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.


இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இன்று ஆரம்பமாகிய இந்த போட்டியில், இலங்கை இராணுவப் படை அணியும், றாகம கிரிக்கெட் கழகமும் மோதிக்கொண்டன.

பனாகொடையில் ஆரம்பமான இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இராணுவப்படை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லீயோ பிரான்சிஸ்கோவின் சதத்தின் உதவியுடன் இன்றைய ஆட்ட நேர முடிவு வரை, 7  விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சதம் கடந்த, லியோ பிரான்சிஸ்கோ இராணுவப்படை அணி சார்பாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில்,  றாகம அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட அமில அபோன்சோ இன்றைய 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியிம் சுருக்கம்

இலங்கை இராணுவப்படை அணி (முதல் இன்னிங்ஸ்): 256/7 (90) – லியோ பிரான்சிஸ்கோ 103, துஷான் விமுக்தி 40, அமில அபொன்சோ 63/6

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.