சுப்பர் லீக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ரத்னம் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நியூவ் யங்ஸ் அணியினர் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தனர்.
புள்ளிப்பட்டியலில் முறையே 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டிருந்த நியூவ் யங்ஸ் மற்றும் ரத்னம் அணிகள் தங்களுடைய முதல் வெற்றியை நோக்கி களமிறங்கியிருந்தன.
ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் பெனால்டி கட்டத்துக்குள் வைத்து ருமேஷ் மெண்டிஸ் தட்டிக்கொடுத்த பந்தை அசித் நிர்மால் குமார கோல் கம்பத்தினுள் செலுத்தி நியூ யங்ஸ் அணிக்கான முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.
>>கடைசி நிமிட கோலுடன் போட்டியை சமப்படுத்திய கொழும்பு எப்.சி<<
தொடர்ந்து 14ஆவது நிமிடத்தில் ரத்னம் அணியின் வீரர் மொஹமட் சரீக் பெனால்டி கட்டத்துக்கு வெளியிலிருந்து மேல் நோக்கி உதைந்த பந்தினை நியூவ் யங்ஸ் அணியின் கோல் கீப்பர் தவறவிட்டார். பந்தினை இலகுவாக தடுப்பதற்கான வாய்ப்பிருந்த போதும், மோசமான கோல் கீப்பிங் காரணமாக எதிரணிக்கு முதல் கோலை விட்டுக்கொடுத்தார்.
இதன்பின்னர் 34ஆவது நிமிடத்தில் மத்தியக்களத்துக்கு அருகிலிருந்து நியூவ் யங்ஸ் அணியின் புலேஷ ரசித் பெர்னாண்டோ பெனால்டி கட்டத்துக்குள் உதைத்த பந்தினை முன்கள வீரர் அசித் நிர்மால் குமார இலாவகமாக கோல் கம்பத்துக்குள் உதைத்து அணியை 2 – 1 என முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதியின் 45 நிமிடங்களில் நிறைவடைந்த நிலையில், ஆட்டத்தில் மேலதிகமாக ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதனை பயன்படுத்திக்கொண்ட ரத்னம் அணி தங்களுக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின் மூலம் முதல் பாதியை 2 – 2 என சமப்படுத்தியது.
ரத்னம் அணியின் அல்போன்ஸ் ராஜ் உதைந்த பிரீ கிக் பந்தினை சரியாக பெற்றுக்கொண்ட பிரான்சிஸ் சிகேருபா ஹெடர் செய்து கோலினை பெற்றுக்கொடுத்தார்.
முதல் பாதி – நியூவ் யங்கஸ் எப்.சி 2 – 2 ரத்னம் வி.க
இரண்டாவது பாதி ஆரம்பித்த பின்னர் இரண்டு அணிகளும் கோல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், 30 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளாலும் கோல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
>>டிபெண்டர்ஸ் அணியை இலகுவாக வீழ்த்திய ரெட் ஸ்டார்! ரினௌன் வி.க எதிர் ப்ளூ ஸ்டார் வி.க<<
சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் நியூவ் யங்ஸ் அணியின் ருமேஷ் மெண்டிஸ் கோர்னர் கம்பத்துக்கு அருகிலிருந்து மேல்நோக்கி உதைந்த பந்தினை மாற்று வீரராக களம் நுழைந்திருந்த பிரான்சிஸ்கோ டில்ஷான் பெர்னாண்டோ ஹெடர் செய்து அணியின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.
இதன்பின்னர் கோல்களை பெறுவதற்கு ரத்னம் அணி முயற்சித்திருந்த போதும், 3-2 என்ற கோல்கள் கணக்கில் நியூவ் யங்ஸ் அணி வெற்றியை உறுதிசெய்தது.
தங்களுடைய முதல் வெற்றியை பெற்ற நியூவ் யங்ஸ் அணியினர் 5 புள்ளிகளை பெற்று டிபெண்டர்ஸ் அணியை பின்தள்ளி 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுநேரம் – நியூவ் யங்ஸ் எப்.சி 3 – 2 ரத்னம் வி.க
கோல் பெற்றவர்கள் – அசித் நிர்மால் குமார 2’ (நியூவ் யங்ஸ்), அசித் நிர்மால் குமார 34’ (நியூவ் யங்ஸ்), மொஹமட் சரீக் 14’ (ரத்னம்), பிரான்சிஸ் சிகேருபா 45+4’ (ரத்னம்), டில்ஷான் பெர்னாண்டோ 75’ (நியூவ் யங்ஸ்)
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<






















