லெக்-ஸ்பின் பிரச்சினைக்கு தீர்வு தருவாரா ஹதுருசிங்க?

549

இலங்கையர்களாகி நாம் லெக்-ஸ்பின் (Leg-spin) பந்து வீச்சை சரியாகக் கையாளத் தவறியுள்ளோம். லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்பதுவே எமது வரலாறு, ஏனென்றால் அவர்களை நாம் சரியாகப் பயன்படுத்த தவறியிருக்கிறோம்.

தற்போதைய காலத்திற்கு மாத்திரம் இது பொருந்தாது. அடுத்த ஆண்டு தனது 80 வயதை எட்டப்போகும் மைக்கல் திசேராவின் காலத்திற்கும் இது பொருந்தும். 1970ஆம் ஆண்டுகளில் திசேரா இலங்கையின் முதல் நிலை துடுப்பாட்ட வீரர். அவர் ஓட்டங்கள் குவிப்பதிலேயே அதிக அவதானம் செலுத்தியதோடு குறைவாகவே பந்துவீசி இருக்கிறார்.  

தனஞ்சயவுக்கு மாற்று வீரர் இன்றி மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை அணி

பெரும்பாலான சர்வதேச அணிகள் தமது அணிக்கு லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்களை உள்வாங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்தியா மாத்திரமல்ல, நோபளம் மற்றும் ஆப்கானியரும் கூட, நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சில சிறந்த துடுப்பாட்ட வீரர்களை தட்டுத் தடுமாறச் செய்தனர். பாகிஸ்தான் அணியிலும் யாஸிர் ஷாஹ் மற்றும் ஷதாப் கான் என்ற இரண்டு சிறந்த லெக்-ஸ்பின்னர்கள் உள்ளனர்.

விக்கெட் வீழ்த்துவது கடினமாக இருக்கம் நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டு துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமாக மாறி வருகிறது. இதனால் மிகத் திறமையாக விரல்களை பயன்படுத்தி சுழல் பந்து வீசுபவர்களுக்கு பிழைத்திருப்பது கடினமாக மாறி வருகிறது. தற்போது பெரும்பாலான அணிகள் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்களிலேயே அதிகம் தங்கியுள்ளன. ஏனென்றால் மணிக்கட்டு பந்துவீச்சாளர்கள் பல பாணிகளில் பந்து வீசுவதோடு தம்மை நிரூபிப்பதற்கு ஆடுகளமும் அவர்களுக்கு சற்று உதவுவதாக உள்ளது.   

புள்ளி விபரங்களும் கூட அதிர்ச்சி தரும் வகையில் இருக்கின்றன. T20 கிரிக்கெட்டின் ஐ.சி.சி. தரப்படுத்தலில் முதல் ஐந்து பந்துவீச்சாளர்களும் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்களாக இருப்பதோடு ஒருநாள் சர்வதேச தரப்படுத்தலில் முதல் பத்து இடங்களில் மூன்று மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.    

சந்திக்க ஹதுருசிங்கவின் வருகையைத் தொடர்ந்து லெக்-ஸ்பின் வீசும் கலைக்கு அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. ஜீவன் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க போன்ற வீரர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு ஜெப்ரி வன்டர்சே மீது அதிக அவதானம் செலுத்தப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் தனது கன்னி போட்டியில் விளையாடிய 28 வயதுடைய வன்டர்சே தொடர்ந்து அணியில் நீடிப்பவராக உள்ளார்.   

கடந்த காலங்களில் எமது லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்கள் குறைந்த அளவு சோபித்திருப்பது ஏன் என்று பார்த்தால், போட்டியில் மிகக் கடினமான கலையான இந்த பந்துவீச்சுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் எமது அணித் தலைவர்கள் போதுமான ஆதரவளிப்பதாக இல்லை. அணித் தலைவர்கள் இந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு பயப்படும் நிலையில் பாடசாலை கிரிக்கெட்டில் லெக்-ஸ்பின் பந்து வீச்சாளர்கள் அழிந்து வருகின்றனர். லெக்-ஸ்பின்னர்கள் தமது பந்துவீச்சின் ஆரம்பத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுக்கும்போது பயிற்சியாளர்கள் அணித் தலைவர் மீது கூச்சலிட ஆரம்பிக்கிறார்கள். லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்கள் தமது வழக்கமான பந்துவீச்சுக்கு வர மூன்று, நான்கு ஓவர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவர்களை பாதுகாத்து சர்வதேச தரத்திற்கு கொண்டுவர இலங்கை போதுமான அளவு பொறுமை காப்பதாக இல்லை.

ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன

ரிச்சி பெனோட்டை பின்பற்றும் திசேரா, கையை உயரச் செலுத்தி ஒரு பக்கமாக உடலை திருப்பி பந்துவீசும் ஒரு சம்பிரதாயமான பந்துவீச்சாளராக உள்ளார்.

சீ.ஐ. குணசேகரவும் சிறந்த ஒரு லெக்-ஸ்பின் பந்துவீச்சாளராக இருப்பதோடு நெவில் பொன்னையாவும் அவ்வாறான ஒருவராக இருந்தார். என்றாலும் காமினி குணசேன மற்றும் மல்கம் பிராங்க் போன்றவர்கள் தமது லெக்-ஸ்பின் பந்துவீச்சால் இலங்கைக்கு புகழ் தேடித் தந்தவர்களாவர். குணசேன நொட்டிங்ஹம்ஷயர் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு விளையாடியுள்ளார். NCC அணிக்கு ஆடிய பிராங்க் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து குவீன்ஸ்லாந்து அணிக்கு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவரும் அவரை உயர்வாக பாராட்டியுள்ளார். ”சிறந்த இடத்திற்கு பந்தை செலுத்தும் பிராங்க் உறுதியான பாணியில் பந்துவீசும் ஒருவராக இருந்தார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷ்லி மலெட்டை அவுஸ்திரேலியாவின் சிறந்த லெக்-ஸ்பின்னராக அவரது காலத்தில் அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்கள் அழைப்பதுண்டு.

எல்மோ ரொட்ரிகோபுள்ளே ஒரு சிறந்த கிரிக்கெட் எழுத்தாளர் என்று எம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் தனது பாடசாலை காலத்தில் ஒரு சிறந்த லெக்-ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்துள்ளார். புனித பெனடிக்ட் கல்லூரி முன்னாள் அணித் தலைவரான அவர் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் புனித தோமியர் அணிக்கு எதிராக ஹட்ரிக் ஓவர் ஒன்றையும் வீசியுள்ளார்.

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் ரவீன் விக்ரமரட்ன

டி.எஸ். டி சில்வா மற்றும் அசோக டி சில்வா போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியபோதும் பந்தை சுழற்றுவதை விடவும் துல்லியமாக வீசும் வேகமான லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்களாக இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்தக் கூடிய மிக அண்மைய லெக்-ஸ்பின் பந்துவீச்சாளராக உபுல் சந்தன இருந்தார். அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டி ஒன்றில் (2004) உபுல் சந்தன மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த சாதனையை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனால் கூட அடைய முடியவில்லை.  

இது ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்கு பின்னர் இலங்கையின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக ஜெப்ரி வன்டர்சே உருவெடுப்பதற்கு சாதகமான சூழலாக தெரிகிறது. வன்டர்சேவுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி அளிப்பதற்கு அவுஸ்திரேலிய முன்னாள் லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர் பீட்டர் ஸ்லீப்பை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பணியில் அமர்த்தியது.

தட்டையாக பந்தை செலுத்த முயற்சிக்கும் வன்டர்சே தனது கூக்லி மற்றும் ட்ரிப்டர் (Drifter) பாணியிலான பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். அவர் ஏற்கனவே பல ஒருநாள் மற்றும் T-20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எவ்வாறான திறமை கொண்டவர் என்பது விரைவில் தெரிய வரும்.  

லெக்-ஸ்பின் பந்துவீச்சாளர்களுடன் பொறுமை காக்க வேண்டும். அவர்கள் வயது மற்றும் அனுபவத்தால் பக்குவமடைபவர்களாக உள்ளனர். ஷேன் வோர்ன் இலங்கைக்கு முதல் முறை சுற்றுப் பயணம் செய்தபோது இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் 228 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார். SSC மைதானத்தில் அவுஸ்திரேலியா 16 ஓட்டங்களால் புகழ்பெற்ற வெற்றியை பெற்றபோது அவர் 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது அவருக்கு திருப்பு முனையாக இருந்தது. அதற்கு பின்னர் அவர் ஒருபோதும் பின்தள்ளப்படவே இல்லை.

ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு லக்ஷான் சந்தகனும் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளராக ஜெப்ரி வன்டர்சேயுமே பார்க்கப்பட்டனர். ஆனால் புதிய நிர்வாகத்தின் வருகையோடு இந்த சிந்தனை மாறியது. லக்ஷான் சந்தகன் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லாவிட்டாலும் தொடர்ந்து நம்பிக்கை தரும் வீரராவார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கன்னி போட்டிகளில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்திய அதிக வீரர்கள் இல்லை. அவர் இலங்கை A அணியுடன் எதிர்வரும் ஜுன் மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. அங்கு இலங்கை A அணி மூன்று நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு

ரங்கன ஹேரத் (40) மற்றும் டில்ருவன் பெரேரா (35) தமது கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள். சந்தகன் மற்றும் வன்டர்சே அவர்களுக்கு பதிலாக நிலைப்பார்களா? என்பதுவே முக்கிய கேள்வியாக உள்ளது.     

இந்த இருவரையும் தவிர்த்து அமில அபொன்சோ (24), பிரபாத் ஜயசூரிய (26) மற்றும் லசித் அம்புல்தெனிய (21) என ஏனைய பெரும்பாலான சுழல் பந்து வீச்சாளர்கள் இடதுகை சுழல் பந்து வீச்சாளர்களாவர். இவர்களுடன் குறைவாக பேசப்படும் வலதுகை ஓப்-ஸ்பின் பந்துவீச்சாளரான நிஷான் பீரிஸ் தாக்கத்தை செலுத்தக் கூடியவராக உள்ளார். ஒரு உறுதியான பந்துவீச்சு பாணியை கொண்டிருக்கும் பீரிஸ் பந்தை அதிகம் சுழலச் செய்ய முடியுமானவராவார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<