ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.
நிஷின் கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்களினால் வீழ்த்தி இலங்கை அணி இந்த வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணிக்கு 35 ஓட்டங்ளுக்குள் முதல் 2 விக்கெட்கள் வீழ்ந்த போதிலும், 3ஆவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ஷாவால் சுல்பிகார் மற்றும் ஆயிஷா ஜாஃபர் ஆகியோர் 70 பந்துகளில் 115 ஓட்டங்கள் சேர்த்து பலமான அடித்தளம் அமைத்தனர். ஆயிஷா ஜாஃபர் 40 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 71 ஓட்டங்கள் எடுத்து ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷாவால் சுல்பிகார் 50 பந்துகளில் 54 ஓட்டங்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் பாகிஸ்தான் அணித்தலைவி பாத்திமா சனா 12 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் காவ்யா காவிந்தி, சமரி அத்தபத்து மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
- சமரி, தில்ஹாரியின் அதிரடியால் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை
- 8ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது இந்தியா
- இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி ஒக்டோபரில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
178 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான இமேஷா துலானி மற்றும் சமரி அத்தபத்து ஜோடி 28 பந்துகளில் 36 ஓட்டங்கள் சேர்த்தது. இமேஷா துலானி 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹசினி பெரேராவுடன் இணைந்த அணித்தலைவி சமரி அத்தபத்து, 2ஆவது விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 95 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஹசினி பெரேரா 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் புயல் வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த சமரி அத்தபத்து, 50 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்கள் விளாசினார். இத்தொடரில் அவர் அடிக்கும் தொடர்ச்சியான 2ஆவது அரைச் சதம் இதுவாகும். அவருடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 12 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 47 ஓட்டங்கள் சேர்த்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் பாத்திமா சனா மற்றும் நஷ்ரா சந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெறும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்யில் இந்தியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது. தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் வெண்கலப் பதக்கத்திற்கான (3ஆவது இடம்) போட்டியில் விளையாடும்.
போட்டியின் சுருக்கம்:
பாகிஸ்தான் மகளிர் அணி: 177/4 (20.0 ஓவர்கள்) – ஆயிஷா ஜாஃபர் 71, ஷாவால் சுல்பிகார் 54, பாத்திமா சனா 20* | காவ்யா காவிந்தி 1/13
இலங்கை மகளிர் அணி: 178/2 (17.5 ஓவர்கள்) – சமரி அத்தபத்து 83*, ஹசினி பெரேரா 42, இமேஷா துலானி 27, ஹர்ஷிதா சமரவிக்ரம 17* | பாத்திமா சனா 1/24
முடிவு: இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















