ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இன்று (18) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதியில் விளையாட தகுதிபெற்றுக் கொண்டது.
நிஷின் கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை இமேஷா துலானி 2 ஓட்டங்களில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த அணித்தலைவி சமரி அத்தபத்து மற்றும் ஹசினி பெரேரா ஜோடி 53 பந்துகளில் 80 ஓட்டங்கள் சேர்த்து அணியை பலப்படுத்தியது. ஹசினி பெரேரா 26 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய சமரி அத்தபத்து 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 14-வது அரைச் சதமாகும்.
அவரைத் தொடர்ந்து கவிஷா தில்ஹாரி மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 37 பந்துகளில் 62 ஓட்டங்கள் சேர்த்தனர். ஹர்ஷிதா 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் குவித்தது. கவிஷா தில்ஹாரி 27 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், ஹன்சிகா கருணாரத்ன ஒரு ஓட்டமும் எடுத்திருந்தனர்.
- 8ஆவது முறையாக மகளிர் ஆசியக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது இந்தியா
- இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி ஒக்டோபரில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
- அனுபவ வீரர்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி
மலேசிய அணி சார்பில் 16 வயதான வலதுகை சுழல்பந்து வீச்சாளர் நூரின் இமானினா 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
161 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசிய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி கொடுத்தனர்.
மலேசிய அணியின் முதல் விக்கெட் முதல் ஓவரிலேயே ரன்-அவுட் முறையில் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து 6ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அசத்தியது. அப்போது மலேசிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது.
பின்னர் இணைந்த வினிஃப்ரெட் துரைசிங்கம் மற்றும் மஹிரா இஸாத்தி இஸ்மாயில் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 42 ஓட்டங்கள் சேர்த்தது. துரைசிங்கம் 47 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மஹிரா 42 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மலேசிய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து (2/3), கவிஷா தில்ஹாரி (2/4) மற்றும் மிதாலி அயோத்யா (2/15) ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இலங்கை அணி, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
போட்டியின் சுருக்கம்:
இலங்கை மகளிர் அணி: 160/4 (20.0 ஓவர்கள்) – சமரி அத்தபத்து 63, கவிஷா தில்ஹாரி 44*, ஹர்ஷிதா சமரவிக்ரம 25, ஹசினி பெரேரா 23, நூரின் இமானினா 3/29
மலேசிய மகளிர் அணி: 74/7 (20.0 ஓவர்கள்) – வினிஃப்ரெட் துரைசிங்கம் 28, மஹிரா இஸாத்தி இஸ்மாயில் 24, சமரி அத்தபத்து 2/03, கவிஷா தில்ஹாரி 2/04, மிதாலி அயோத்யா 2/15
முடிவு: இலங்கை மகளிர் அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















