பாகிஸ்தானை வென்ற இலங்கை அணிக்கு 145,000 டொலர்கள் பணப்பரிசு

92
PCB

பாகிஸ்தான் அணியுடனான T20i கிரிக்கெட் தொடரை வெல்லக் காரணமாக இருந்த இலங்கை வீரர்களுக்கு 145,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 2.6 கோடி ரூபா) பணப்பரிசை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். 

சர்வதேச T20அரங்கில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வெற்றிகொண்டு வரலாறு படைத்தது அனுபவமற்ற வீரர்களைக் கொண்ட இலங்கை அணி.

பாகிஸ்தானில் இலங்கை அணி செயற்பட்டவிதம் சிறப்பாக இருக்கின்றது – ருமேஷ் ரத்நாயக்க

உலகின் முதல் நிலை T20 அணியான பாகிஸ்தானுக்கு எதிராக இளம் வீரர்களை…

இந்த நிலையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இலங்கை அணி கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பியிருந்தது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான T20i தொடரில் எமது வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர். எனவே, அவர்களது திறமைகளை பாராட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும்.   

அதன்படி, T20i தொடரில் விளையாடிய வீரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 90 இலட்சம் ரூபா) பணத்துக்கு மேலதிகமாக இன்னும் 50,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்

அத்துடன், T20i கிரிக்கெட் தொடரில் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை பருவகாலத்தில் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடுகின்ற வீரர்களுக்கு வழங்குகின்ற சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஷம்மி சில்வா இதன்போது சுட்டிக்காட்டினார்.  

“இதற்குமுன் Tier A தொடரில் பங்கேற்கின்ற கழகங்களுக்கு 12 இலட்சம் ரூபா பணத்தை வழங்கி வந்தோம். இம்முறை அதை 21 இலட்சமாக அதிகபரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல, Tier B கழகங்களுக்கான வழங்கி வந்த 8.5 இலட்சம் ரூபா பணத்தை 13 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும், Tier A கழகங்களுக்காக விளையாடுகின்ற வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற 7,500 ரூபா பணத்தை 12,000 ரூபாவாகவும், Tier B கழகங்களுக்கான விளையாடுகின்ற வீரர்களுக்கான சம்பளத்தை 5,000 ரூபாவிலிருந்து 6,000 ரூபா வரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<