தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

Sri Lanka tour of England 2021

203

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று T20I போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவிய இலங்கை அணி, தவறுகளை திருத்திக்கொண்டு ஓருநாள் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளது.

குறித்த இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா, ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

T20I தொடரில் தோல்வியடைந்த விதத்தை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், அதில் கிடைத்த விடயங்களை வைத்து எவ்வாறு போட்டியொன்றை கொடுப்பது என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம்.

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடும், பந்துவீசும் மற்றும் களத்தடுப்பில் ஈடுபடும் விடயங்களை பார்க்கும் போது, எம்மைவிட மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” 

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் நிலையான அணியாக இருக்கும் இங்கிலாந்து அணியை, அனுபவம் குறைந்த இளம் அணியாக எதிர்கொள்ளும் போது, இவ்வாறான வித்தியாசங்கள் தோன்றும் எனவும், இருப்பினும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்க எதிர்பார்ப்பதாகவும் குசல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

T20I தொடரில் நாம் துடுப்பெடுத்தாடிய விதம் மோசமானது என்பதை உணரவேண்டும். குறித்த தவறினை ஏற்றுக்கொள்ள வேண்டும். துடுப்பாட்ட வீரர்களாக சிறப்பாக செயற்பட்டிருந்தால், சிறந்த போட்டியை கொடுக்க முடிந்திருக்கும்.

இந்த தொடரில் எம்மால் செய்த முடிந்தவையை சரியாக செய்ய வேண்டும். எனவே, நாம் துடுப்பெடுத்தாடும் விதத்தை நூறு சதவீதம் சரியாக செய்ய வேண்டும். குறிப்பாக போட்டிகள் அனைத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இல்லை. பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு குறைவான காலப்பகுதியே உள்ளது. பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, உளவியல் ரீதியில் தயாராகினால் மாத்திரமே சிறப்பாக ஆடமுடியும்

இதேவேளை, அனைத்துவகையான போட்டிகளில் விளையாடும் போதும், அனுபவம் மிக முக்கிய விடயம். தேர்வுக்குழுவினர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள போதும், அனுப வீரர்களை முழுமையாக ஒதுக்கிவிடவில்லை என குசல் பெரேரா குறிப்பிட்டார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தேர்வுக்குழுவினர் எடுத்தனர். அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை என கூறவில்லை. காரணம், அனைத்துவகை போட்டிகளுக்கும் அனுபவம் என்பது மிக முக்கியமானது. எனவே, இதுதொடர்பில் தேர்வுக்குழுவினர் ஆராய்வர் என்றார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் (29) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…