பாகிஸ்தான் சுப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறிய காரணத்திற்காக, இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன் ஷானகவிற்கு ஓராண்டு தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்காக, லாகூர் கலாண்டர்ஸ் அணி தசுன் ஷானகவை 75 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும், கடந்த மார்ச் 21 ஆம் திகதி அவர் பிஎஸ்எல் தொடரிலிருந்து திடீரென விலகினார். ஆனால், அவர் விலகிய அடுத்த நாளே, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் சாம் கரனுக்கு மாற்று வீரராக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவே சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்தது.
இந்நிலையில், லீக் நிர்வாகம் மற்றும் லாகூர் கலாண்டர்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு வீரர் தானாக முன்வந்து தொடரிலிருந்து விலகியது, வீரர் பதிவு விதிமுறைகள் மற்றும் முத்தரப்பு ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் தெளிவாக மீறுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒப்பந்தக் கட்டமைப்பில் அங்கீகரிக்கப்படாத காரணங்களுக்காகவே இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.’
மேலும் அந்த அறிக்கையில், ‘விசாரணையின் போது வீரர் தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பாகிஸ்தானில் விளையாடுவதற்கான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். எனினும், ஒப்பந்த விதிமீறலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், லீக்கின் நேர்மை மற்றும் விதிகளின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும் இந்த ஒழுங்கு நடவடிக்கை அவசியமாகிறது,’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இணையும் பவன் ரத்நாயக்க
- சர்பராஸ் அஹ்மட்டுக்கு பாகிஸ்தான் அணியில் முக்கிய பதவி
எது எவ்வாறாயினும், தசுன் ஷானக, இந்த விவகாரம் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகும் எனது முடிவிற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். இதற்காக பாகிஸ்தான் மக்கள், பிஎஸ்எல் ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்திடம் எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.
தசுன் ஷானக மீதான இந்த நடவடிக்கை, ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இரண்டு பிஎஸ்எல் சீசன்களுக்கு தடை விதித்த சில தினங்களிலேயே எடுக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய முசரபானி முடிவெடுத்தார். இதன் காரணமாக பிஎஸ்எல் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட மிகக்கடுமையான தண்டனையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தடை ‘மிகவும் அதிகப்படியானது’ என முசரபானியின் முகவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறயினும், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலகி ஐபிஎல் தொடருக்குச் சென்ற காரணத்திற்காக தடை விதிக்கப்படும் மூன்றாவது வீரர் தசுன் ஷானக ஆவார்.
இதற்குமுன் ஜிம்பாப்வேயின் பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் தென்னாப்பிரிக்காவின் கோர்பின் போஷ் ஆகிய இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















