சுற்றுலா தென்னாபிரிக்க A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அபார பந்துவீச்சின் மூலம் தென்னாபிரிக்க அணியை 131 ஓட்டங்களுக்கு இலங்கை அணி கட்டுப்படுத்தியுள்ளது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் (13) நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டநேரத்தில் தென்னாபிரிக்க A அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை அந்த அணிக்கு ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை கொடுத்தனர். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க முதல் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுக்க தொடங்கினார்.
இவர் தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜோர்டன் ஹெர்மனை ஓட்டங்களின்றி போவ்ல்ட் முறையில் வெளியேற்றினார். தொடர்ந்த ஓவர்களில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை சாய்த்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுக்க, மறுமுனையில் லசித் எம்புல்தெனிய மற்றும் லக்சித மானசிங்க ஆகியோர் சுழல் பந்துவீச்சில் நெருக்கடியை கொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணிசார்பாக அதிகபட்சமாக மெதிவ் பிரீட்ஷ்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லக்சித மானசிங்க அபாரமாக பந்துவீசி 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தென்னாபிரிக்க A அணியின் இன்னிங்ஸை தொடர்ந்து போட்டியில் மழைக்குறுக்கிட்டதுடன், தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை விட 194 ஓட்டங்களால் முன்னிலையை பெற்றுள்ளது.