பாணந்துறை அணிக்கு வலுசேர்த்த நவீடின் அபார துடுப்பாட்டம்

107

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 3ஆவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று (28) ஆரம்பமாகின.

கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகின்ற இப்போட்டித் தொடரில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் சார்பாக விளையாடி வருகின்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 34 வயதான காஷிப் நவீத், கடற்படை விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் 192 ஓட்டங்களைப் பெற்று இரட்டைச் சதத்தைப் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

அதேநேரம் நீர்கொழும்பு விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் களுத்துறை நகர சபை அணியின் மதீஷ பெரேரா பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் விமானப்படை அணியின் நிலேஷ் விமுக்தி ஆகிய வீரர்கள் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

காஷிப்நவீத்தின் அபார சதத்தின் உதவியுடன் பாணந்துறை விளையாட்டு கழகம் கடற்படை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சுக்காக ஸ்திரமான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பாணந்துறை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கடற்படை அணி பாணந்துறை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பாணந்துறை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய காஷிப் நவீத், இன்றைய நாள் நிறைவடையும் வரை ஆடுகளத்தில் இருந்து 2 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 192 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

ஷெஹான் ஜயசூரியவின் சதத்தின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் வலுவான நிலையில்

பந்துவீச்சில் கடற்படை அணி சார்பாக சதுரங்க திக்குபுர, இஷான் அபேசேகர மற்றும் சுதார தக்‌ஷின ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 375 (92.1)  –  காஷிப் நவீத் 192, மாதவ சுகுரங்க 73, ஷஷ்ரிக்க புசேகொல்ல 31, சதுரங்க திக்குபுர 3/45, இஷான் அபேசேகர 3/96, சுதார தக்‌ஷின 3/108


நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம்

கதிரான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நீர்கொழும்பு அணியின் தலைவர் உமேக சதுரங்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நீர்கொழும்பு அணி, இன்றைய நாள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக நிதானமாக துடுப்பெடுத்தடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரவீன் பெர்னான்டோ 87 ஓட்டங்களையும், பிரசன்சன ஜயமான்ன 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

எனினும், இப்போட்டியில் ஆரம்பம் முதல் நீர்கொழும்பு அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து பந்துவீச்சில் மிரட்டிய களுத்துறை அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான மதீஷ பெரேரா 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) –  221 (92.2)  –  பிரவீன் பெர்னான்டோ 87, பிரசன்சன ஜயமான்ன 54, ரவீந்திர கருணாரத்ன 24, மதீஷ பெரேரா 5/47, எரங்க ரத்னாயக்க 2/12


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ராஜு கயஷானின் 58 ஓட்டங்களும், லக்ஷான் பெர்னாண்டோவின் 51 ஓட்டங்களுமே அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதன்போது பொலிஸ் அணி சார்பில் நிலேஷ் விமுக்தி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்

முதல் நாளில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பொலிஸ் அணியும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பந்துவீச்சில் விமானப்படை அணி சார்பாக சொஹான் ரன்ஜிக 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 234 (59.1) – ராஜு கயஷான் 58, லக்ஷான் பெர்னாண்டோ 51, ரொஸ்கோ தட்டில் 33, நிலேஷ் விமுக்தி 5/85, சமோத் பியுமால் 2/55

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 76/4 (30) – தரிந்து டில்ஷான் 38, சொஹான் ரன்ஜிக 2/18


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம்

2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான இப்போட்டியில் குருநாகலை யூத் அணி வலுவான நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது.

பனாகொடை இராணுவ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லங்கன் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 248 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக சானக ருவன்சிறி 81 ஓட்டங்களையும், சஷேன் பெர்னாந்து 55 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று அவ்வணிக்கு வலு சேர்த்திருந்தனர்.

பந்துவீச்சில் கேஷான் விஜேரத்ன, சிவகுமார் டிரோன், ருவந்த ஏகநாயக்க மற்றும் துசித் டி சொய்சா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த குருநாகலை யூத் அணி இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (83.1) – சானக ருவன்சிறி 81, சஷென் பெர்னாந்து 55, ரஜீவ் வீரசிங்க 32, கேஷான் விஜேரத்ன 2/28, சிவகுமார் டிரோன் 2/44, ருவந்த ஏகநாயக்க 2/51, துசித் டி சொய்சா 2/62

குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 17/0 (5)

நாளை போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.