இந்திய குழாத்தில் இணையும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள்!

T20 World Cup 2022

210

இந்தியாவின் T20 உலகக்கிண்ண குழாத்தில் இணைந்துக்கொள்வதற்காக வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் சிராஜ், மொஹமட் சமி மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் அவுஸ்திரேலியா பயணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா புறப்பட்டுச்சென்றுள்ள இந்த மூன்று வீரர்களில் ஒருவர், உபாதைக்குள்ளான ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலாக T20 உலகக்கிண்ண குழாத்தில் இணைந்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணியில் புதிய வீரர்

மொஹமட் சமி கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளார். அதேநேரம், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த மொஹமட் சிராஜ் மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஏற்கனவே மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சஹார் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதால், அவருக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாகூர் அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ளார்.

இதேவேளை இதற்கு முதல் T20 உலகக்கிண்ணத்துக்கான மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஷிரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேலும், ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலான மாற்று வீரர் வெள்ளிக்கிழமைக்குள் (14) அறிவிக்கப்படுவார் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<