2009 லாகூர் தாக்குதலில் என்ன நடந்தது? சங்கக்காரவின் பகிர்வு

4267

பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தானும், சக வீரர்களும் உயிர்பிழைத்ததிற்கு பஸ் சாரதியின் துணிச்சலே காரணம் எனவும், அவர் தான் உண்மையான ஹீரோ என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் மைக்கல் ஆத்தர்ட்டனுடன் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது சங்கக்கார தனது இளமைக் காலத்தின் முகங்கொடுத்த உள்ளூர் யுத்தம், அதன்பிறகு இடம்பெற்ற சுனாமி பேரலை மற்றும் லாகூர் தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றை நினைவுகூர்ந்தார்

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆட இலங்கை அணியினர் பஸ்ஸில் லாகூரின் கடாபி கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்த போது தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர்.

T20 உலகக் கிண்ணத்தை பிற்போட சங்கக்கார கோரிக்கை

இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பில், குமார் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அப்போதைய இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் செல்வதில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருந்தன. பாதுகாப்பு குறித்த கவலை பற்றி நாங்கள் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுதியிருந்தோம். எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் என்ன செய்வது என்று காப்பீடு எடுப்பது பற்றியெல்லாம் யோசித்தோம்

ஆனால், எங்கள் கோரிக்கைகள் கண்ணியமாக நிராகரிக்கப்பட்டன. பாதுகாப்பை உறுதி செய்ய அவர்கள் அனைத்துவிதமான களப் பணிகளையும் செய்துவிட்டனர் என எங்களுக்குச் சொல்லப்பட்டது. எனவே நாங்கள் சென்றோம்.

வீரர்களுக்கான பஸ் வண்டியில் எப்போதும் போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிக் கொண்டு வந்தோம். அன்று மாலை என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிப் பேசும்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர். இங்கு ஆடுகளங்கள் மிகவும் தட்டையாக உள்ளன. எனக்கு மன அழுத்தத்தினால் எலும்பு முறிவு ஏற்படும். ஒரு வெடிகுண்டு வெடித்தால் நன்றாக இருக்கும். நாம் வீடு திரும்பிவிடலாம் என்று பேசினார். 20 செக்கன்கள் கழித்துத் தாக்குதல் இடம்பெற்றது.

திலகரத்ன டில்ஷான் முன்னால் தான் உட்கார்ந்திருந்தார். நான் நடுவில் இருந்தேன். மஹேல ஜயவர்தன பின்னால் இருந்தார். திலான் சமரவீரவைக் கிண்டல் செய்ய முரளிதரன் எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தார்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதான முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். எங்கள் அணி ஊழியர் ஒருவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. முதலில் பட்டாசு என்று நினைத்தோம். அவர் எழுந்து நின்று, கீழே குனியுங்கள், பஸ் வண்டியை நோக்கிச் சுடுகிறார்கள் என்று அலறினார்.

கோஹ்லி – ரோஹித் சிறந்த ஜோடி என்கிறார் சங்கக்கார

உடனே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் என மறைந்து ஒளிந்து கொண்டோம். துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுட்டார்கள். கையெறி குண்டு வீசினார்கள். ரொக்கெட் லான்சரைச் செலுத்தினார்கள். ஆனால் நாங்கள் எப்படியோ உயிர் பிழைத்தோம்.

திலான் சமரவீரவுக்கு காயம் பட்டது. குண்டின் துகள்கள் என் தோளைத் துளைத்தன. அஜந்த மெண்டிஸுக்கு அடிபட்டிருந்தது. பரணவிதான மார்பிலிருந்து இரத்தம் சொட்ட எழுந்து நின்று தான் சுடப்பட்டதாகச் சொல்லி கீழே மயங்கி விழுந்தார்

பேருந்தைச் சுற்றி துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது. எமது பயிற்சியாளர் போல் பாப்ரேஸ் கையினை ஒரு இரும்புக் கம்பி துளைத்து அது அங்கிருந்து 500 மீற்றர் தொலைவிலிருக்கும் மைதானத்துக்குச் சென்றது

மிகவும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் மட்டுமே இருந்தன. துரதிஷ்டவசமாக எங்களுக்குப் பாதுகாப்பாக நின்ற அத்தனை பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். அது மிகவும் கவலையை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக, எங்கள் பஸ் வண்டி சாரதியை சுட முயன்றனர். ஆனால் அதிஷ;டவசமாக அவர் உயிர் தப்பித்தார். அவர் தான் நாயகன். அவர் பிழைத்திருந்ததால் தான் எங்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முடிந்தது. நாங்கள் உயிர் பிழைத்தோம்

வழக்கமாக சாரதி அந்தக் குறுகிய நுழைவாயலில் நான்கு முறை முயன்ற பிறகு தான் பஸ் வண்டியை உள்ளே எடுத்துச் செல்வார். ஆனால் இம்முறை நேராக உள்ளே சென்றார். நாங்கள் உடனடியாக பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.

பஸ் வண்டி சாரதி மிஹிர் முஹம்மட்டுடன் சங்கக்கார

உண்மையில், பரணவிதான இறந்துவிட்டதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் தன் முதுகைத் தொட்டுப் பார்த்து, என் முதுகில் ஓட்டை இல்லை. எனக்கு ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் என்று சொல்லி நடந்து சென்றார்.

திலான் சமரவீரவுக்கு அதிகமாக இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. மோசமாக அடிபட்டிருந்தது. அவரை அம்ப்யூலன்ஸில் அழைத்துச் சென்றனர்

அடுத்த அம்ப்யூலன்ஸில் நானும் அஜந்த மெண்டிஸும் சென்றோம். ஆனால் அம்ப்யூலன்ஸை நோக்கியும் அவர்கள் சுட ஆரம்பித்ததால் அங்கேயே இருக்க முடிவு செய்தோம். என சங்கக்கார தெரிவித்தார். 

இந்தச் சம்பவத்துக்குப் பின் பல சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்த்தன. ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கை அணிதான் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக கடந்த வருடம் பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தது

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்குச் சென்று ஊக்குவிக்க வேண்டும் எனவும், பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் குமார் சங்கக்கார வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<