சொகுசு ஹோட்டலில் வீட்டுக் காவலில் இருந்து ரொனால்டினோ…

76
Ronaldinho
@thesun

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரரான ரொனால்டினோ, போலி கடவுச்சீட்டு விவகாரம் காரணமாக கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தன்னுடைய நிலை குறித்து முதன்முதலாக நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

போலி கடவுச்சீட்டுடன் பரகுவே நாட்டுக்கு நுழைய முயன்ற குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ மற்றும் அவரது மூத்த சகோதரர் மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொவிட்-19 காரணமாக மாலைத் தீவுகளில் சிக்கியுள்ள சுஜான் பெரேரா

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கால்பந்து அணியின் கோல் காப்பாளர்..

பின்னர், அவர்களின் பிணை மனுவை நிராகரித்து, விசாரணை முடியும் வரை அதிகபட்சம் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் முடிவுசெய்தது. இருப்பினும், இந்த வழக்கு 32 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்பட்டபோது, அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், ரொனால்டினோவும் அவரது சகோதரரும் அசுன்சியன் நகரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலான பால்மோகிராவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் தனது முதல் நேர்காணலில் பங்கேற்ற ரொனால்டினோ, அவர்கள் பெற்ற கடவுச்சீட்டு சட்டவிரோதமானது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட ரொனால்டினோ “ஆவணங்கள் சட்டவிரோதமானது என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அப்போதிருந்து, எங்கள் நோக்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடயங்களை தெளிவுப்படுத்த உதவுவதாகும். அப்போதிருந்து நடந்த அனைத்தையும் நாங்கள் விளக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களிடம் கேட்ட அனைத்தையும் அவர்களிடம் முன்வைக்க முடிந்தது. ”

ரொனால்டினோ சிறைக்குச் செல்லும் போது எப்படி உணர்ந்தார் என்பதையும் நேர்காணலில் விவரித்தார்.

“மிகவும் கடினமாக இருந்தது. நான் அப்படி ஒரு விடயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் தொழில் ரீதியாக முதலிடம் பெறவும், எனது கால்பந்து மூலம் மக்களை மகிழ்விக்கவும் முயற்சித்து வருகிறேன் ”

சிறையில் கால்பந்து விளையாடுவதற்கு தனக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்ததாகவும், தன்னுடன் இருந்த ஏனைய கைதிகள் தவறாமல் நினைவு பரிசுகளையும், புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், பரகுவே நாட்டின் மக்கள் மீது ரொனால்டினோவுக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும், அவரது மதம் அவருக்கு பெரும் ஆதரவாக இருந்தது எனவும் கூறினார்.

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில்…

“நான் இங்கு வந்த நாளிலிருந்து, பரகுவே மக்களின் விருந்தோம்பல், அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்காக அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் எனது மதத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எல்லாம் சரியாக நடக்க நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். எனவே இவை அனைத்தும் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறேன் ”

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 காரணமாக, நேர்காணல் முழுவதும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தவிர எல்லா நேரங்களிலும் ரொனால்டினோ முகமூடி அணிந்திருந்தார். இந்த சம்பவம் முடிந்தவுடன் விரைவில் தனது தாயைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன் என்று ரொனால்டினோ கூறினார்.

“இவை முடிந்ததும், நான் முதலில் செய்வது என் அம்மாவிடம் சென்று அவளை முத்தமிடுவதுதான். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொடங்கிய நாளிலிருந்து அவள் வீட்டில் நிறைய நேரம் செலவிடுகிறாள். அதன்பிறகு, இந்த சம்பவத்தின் மூலம் நடந்த அனைத்தையும் சகித்துக்கொள்வதும், நம்பிக்கையுடனும் பலத்துடனும் தொடர்ந்து பணியாற்றுவதும் எனது நம்பிக்கை ”

ரொனால்டினோ தங்கியிருக்கும் ஹோட்டலின் முகாமையாளர் எமிலியோ யெக்ரோஸ், ஏ.எஃப்.பி மீடியா நிறுவனத்திடம், கால்பந்து பயிற்சி செய்ய ரொனால்டினோவுக்கு ஒரு பெரிய அறை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், இப்போது அவர் தனது நேரத்தை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் முகத்தில் எப்போதும் ஒரு பெரிய புன்னகை இருக்கும். அவரது சகோதரரும் அவ்வாறே இருக்கிறார். முதல் நாள் அவர் இங்கு வந்ததை விட இப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அவரது முகம் காட்டுகிறது. முதல் நாளில் அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார்”

ரொனால்டினோவின் போலி ஆவணங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பலரை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரொனால்டினோவின் வழக்கறிஞர் அடோல்போ மரின், இந்த கடவுச்சீட்டுகள் பரிசாக பெற்றுள்ளப்பட்டுள்ளதாகவும், அவை பயனற்ற ஆவணங்கள் என நினைத்ததாகவும் கூறியுள்ளார். ரொனால்டினோ தனது பையிலிருந்து கடவுச்சீட்டை எடுத்த போது, அவர் கையில் கிடைத்தது போலியான கடவுச்சீட்டு என வழக்கறிஞர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், அதிகாரிகள் காரணங்கள் குறித்து திருப்தி அடையவில்லை. ரொனால்டினோவின் பிரேசில் மற்றும் ஸ்பெயின் கடவுச்சீட்டுகள் சட்ட சிக்கல்கள் காரணமாக பிரேசில் நீதிமன்றத்தால் கடந்த 2019ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தனது பிரேசில் கடவுச்சீட்டை பரகுவேயில் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்தில் நுழைந்த போது, பயன்படுத்தியிருந்த போதும், திரும்பிச் செல்லும் போது, பரகுவே கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பான முழு விசாரணையும் முடியும் வரை ரொனால்டினோவும் அவரது சகோதரரும் வீட்டுக் காவலில் இருப்பார்கள் எனவும், அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

>> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<